எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை சம்பந்தமாக நாளை காலை 9.15 மணிக்கு சட்டப்பேரவை சபாநாயகரை எடப்பாடி பழனிசாமி தரப்பு சந்திக்கவுள்ளனர்.
எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை பெரும் சர்ச்சையாகி தேர்தல் ஆணையத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமியும், துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக அமரும் வகையில் இருக்கைகள் உள்ளன. இது கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போதே சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது இன்னும் தொடர்கிறது.
கடந்த முறை, எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி அருகே ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருக்கை பழைய நிலையிலேயே தொடரும் என விளக்கம் அளிக்கப்பட்டது.
அதேபோல வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரது இருக்கைகள் மாற்றப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஒருநாள் மட்டுமே சட்டப்பேரவை நடைபெற்றது. அன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் இருக்கை விவகாரத்தை முன்வைத்து வெளிநடப்பு செய்தனர்.
தற்போது வரை சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் நீடிக்கிறார். இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், ஆளுநர் உரையில் பங்கேற்க இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் வந்திருந்தனர். அவர்கள் இருக்கை மாற்றப்படாத நிலையில் இருவரும் அருகருகில் அமர்ந்திருந்தனர்.
இந்நிலையில், அதிமுக சட்டமற்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதில் சட்டப்பேரவையில் எது போன்ற மக்கள் பிரச்சனையை முன் வைக்கலாம் என்பதை பற்றி ஆலோசிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை சம்பந்தமாக நாளை காலை 9.15 மணிக்கு சட்டப்பேரவை சபாநாயகரை எடப்பாடி பழனிசாமி தரப்பு சந்திக்க முடிவு செய்யப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, OPS - EPS, TN Assembly