சென்னைக்கு மாதவரம், சோழிங்கநல்லூர், அம்பத்தூர், திருவள்ளூர் பகுதிகளில் உள்ள பண்ணைகளில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 14.50 லட்சம் லிட்டர் ஆவின் பால் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், சோழிங்கநல்லூர் பண்ணையில் பணியாற்றும் லோடு மேன், ஓட்டுநர்கள் உள்ளிட்ட ஒப்பந்த ஊழியர்கள் பெரும்பாலானோர் விடுப்பு எடுத்ததால், அதிகாலை 1.30 மணிக்குள் பால் ஏற்றிக் கொண்டு செல்ல வேண்டிய வாகனங்கள் இயக்கப்படவில்லை.
இதனால், சுமார் 1 லட்சம் லிட்டர் பால் விநியோகம் முடங்கியது. சோழிங்கநல்லூர், மயிலாப்பூர், அடையாறு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் பால் முகவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பால் கிடைக்காமல் பாதிப்படைந்தனர்.
இதற்கிடையே, அம்பத்தூர், மாதவரம் ஆவின் பால் பண்ணைகளில் இருந்து தென் சென்னை பகுதிகளுக்கு பால் பாக்கெட்டுகள் அனுப்பப்பட்டு, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள பால் தட்டுப்பாட்டை சமாளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு எதுவும் ஏற்படவில்லை என்று ஆவின் நிர்வாகம் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு தகவல் தெரிவித்தது.
ஆவின் பால் விநியோகம் செய்வதில் சற்று தாமதம் மட்டுமே ஏற்பட்டதாக தெரிவித்துள்ள ஆவின் நிர்வாகம், சோழிங்கநல்லூர் ஆவின் பண்ணையில் பால் பாக்கெட் அடுக்கும் பிரிவில் ஒப்பந்த ஊழியர்கள் திடீர் விடுப்பால், பால் பாக்கெட்டுகள் விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும், அது சரி செய்யப்பட்டதை அடுத்து, புதன்கிழமை முதல் சரியான நேரத்தில் பால் விநியோகம் நடைபெறும் என்றும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.