செங்கல்பட்டு அருகே மது போதையில் நண்பரை நகவெட்டியில் உள்ள கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட புலிப்பாக்கம், மேட்டு தெரு பகுதியை சேர்ந்தவர் அருண் (35). இவர் கிடைக்கும் சிறுசிறு வேலைகளை செய்து வந்துள்ளார்.
இவர் அடிக்கடி, மனைவியிடமும் சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். குடிப்பழக்கத்திலிருந்து மீள்வதற்கு மறுவாழ்வு மையத்திற்கு, அருண் சென்று வந்த பிறகும் தொடர்ந்து மதுவுக்கு அடிமையாகவே இருந்து வந்துள்ளார்.
மனைவி பிரிந்து சென்றதிலிருந்து அடிக்கடி ஊரில் இருக்கும் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுடன் சென்று நள்ளிரவு வரை குடித்துவிட்டு போதையில் இருப்பதே வழக்கமாக கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முதல் அருண் திடீரென மாயமாகியுள்ளார். அருண் போதையில் எங்காவது சென்று இருக்கலாம் என அவர்கள் உறவினர்களும் விட்டுவிட்டனர்.
இந்த நிலையில், புலிப்பாக்கம் மேட்டு தெரு பகுதியை சேர்ந்த பசுபதி மற்றும் தனசேகர் ஆகிய இருவரும் சந்தேகத்துக்கு இடமான வகையில் கூடுவாஞ்சேரி அருகே மது குடித்துவிட்டு , ஏதோ கொலை செய்து விட்டோம் என பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இது குறித்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில், நேற்று நள்ளிரவு 11 மணியளவில், புலிப்பாக்கம் ஹைவே டவுன் பகுதியில் அருண், பசுபதி மற்றும் தனசேகர் ஆகியோர் இணைந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அருணுக்கும், மற்ற இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பசுபதி மற்றும் தனசேகர் ஆகியோர் இணைந்து நகவெட்டியில் இருக்கும் சிறிய கத்தியை பயன்படுத்தி அருணின் கண், காது, முகம் உள்ளிட்ட பகுதிகளில் 30 முதல் 40 முறை குத்தி உள்ளனர். இதனையடுத்து, அங்கு இருந்த கால்வாயில் அருணை தள்ளிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அருண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
மறுநாள் காலை அருண் உயிரிழந்திருக்கிறாரா, என்பதை இருவரும் நேரில் சென்று பார்த்து உறுதிப்படுத்தி உள்ளனர். அப்போது அவர் அங்கு இறந்த கிடந்ததை பார்த்து பயத்தில் அங்கிருந்து சென்று மது அருந்திய போது உளறி மாட்டி கொண்டுள்ளனர்.
செய்தியாளர்: ராபர்ட் எபினேசர், செங்கல்பட்டு.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chengalpattu, Crime News, Local News, Murder