தூக்கம் வந்தால் காபி, தூக்கம் வராவிட்டால் காபி, மனசு சரி இல்லை என்றால் காபி, சந்தோஷமாக இருந்தால் காபி என்று காபி பைத்தியமாக இருப்பவர்கல் ஒரு விஷயத்தை கவனித்திருக்க வாய்ப்புண்டு. சமீப காலமாக காபியின் விலை கணிசமாக அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் உற்பத்தி குறைந்து வருவதால் காபி விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. காபி உற்பத்தி குறைவதற்கு யார் காரணம் தெரியுமா? அதுவும் நீங்கள் தான்.. எப்படி என்று சொல்கிறோம்.
ஒரு புதிய ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள், ஒரே நேரத்தில் பல நாடுகளில் ஏற்பட்ட பயிர் வளர்ச்சி தோல்வியால் உலகளாவிய காபி உற்பத்தி ஸ்தம்பித்து நிற்பதை கவனித்துள்ளனர். மேலும் சில ஆண்டுகளில் காபி உற்பத்தி 50 சதவீதம் சுருங்கக்கூடும் என்று அவர்களது ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
அப்படி காபி உற்பத்தி சுருங்குவதற்கான காரணங்களை பட்டியலிட்ட போது அதில் பிரதானமாக இருந்தது மோசமான வானிலை மற்றும் புவி வெப்பமடைதல். காலநிலை மாற்றத்தால் காபி வளர்வதற்கான சூழல் மாறி வருவதாக தெரியவந்துள்ளது. இதனால் காபி கொட்டைகள் உற்பத்தி அளவு குறைவது மட்டும் இல்லாமல் காபி கொட்டையின் தரமும் குறைந்து வருகிறது.
"எல் நினோ சதர்ன் ஆஸிலேஷன் (ENSO) போன்ற பெரிய அளவிலான காலநிலை நிகழ்வுகளால் இயக்கப்படும் காலநிலை முரண்பாடுகளால் இந்த பயிர் தோல்விகள் நடப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி இருக்கலாம் " என்று PLOS க்ளைமேட் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர் .
ஆராய்ச்சியாளர்கள் 12 காலநிலை அபாயங்கள் மற்றும் இந்த அபாயங்கள் எந்த அளவிற்கு காபி உற்பத்தியை பாதித்தது என்பதை ஆராய்ந்தனர். அதோடு 1980 மற்றும் 2020 க்கு இடையில் இந்த ஆபத்துகள் கணிசமாக அதிகரித்திருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். ஆபத்து வகை அதிக குளிர்ச்சியான சூழ்நிலையிலிருந்து அதிக வெப்பத்திற்கு மாறியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இடஞ்சார்ந்த கூட்டு அபாயங்கள் மிகவும் பொதுவானதாகிவிட்டன.
இரண்டு முக்கிய காபி வகைகளான அராபிகா மற்றும் ரோபஸ்டா ஆகியவை 18 முதல் 22 டிகிரி செல்சியஸ் மற்றும் 22 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை உள்ள சூழலில் வளரும் என்பது குறிப்பிடத் தக்கது. முக்கியமாக அராபிகா, ஒரு உணர்திறன் பயிராகக் கருதப்படுகிறது, இது சிறிய காலநிலை மாறுபாட்டை சந்தித்தால் கூட எளிதாக பாதிக்கப்படக்கூடிய வகையாக உள்ளது. அதனால் புவி வெப்பமயமாதல் இந்த வகை காபியை பெரிதாக பாதித்துவிடுகிறது.
"பசிபிக் பெருங்கடலில் உள்ள எல் நினோ போன்ற கடல் மேற்பரப்பு வெப்பநிலை, பெரும்பாலான காபி பகுதிகளில் குறைந்த மழைப்பொழிவு மற்றும் அதிகரித்த வெப்பநிலையுடன் தொடர்புடையது. அந்த சூழல் தான் காபி வளர்ச்சிக்கு ஏற்றது. அனால் அது தற்போது வெப்பம் மற்றும் வறண்ட சூழலாக மாறி வருகிறது" என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வறிக்கையில் தெரிவித்தனர்.
இந்த காலநிலை மாற்றம் காபி உற்பத்தியை நம்பி இருக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெரிதும் மாற்றும். காலநிலை மாற்றம் உலகளாவிய காபி விநியோகத்தை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் காபி சாகுபடிக்கு ஏற்ற நிலத்தின் பரப்பளவு 50 சதவீதம் வரை குறைக்கப்படலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Climate change, Coffee