KYC விதிமுறைகளுக்கு இணங்காததற்காக ஓலா நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி கடந்த மாதம் ஜூன் 12 அன்று ஒரு கோடியே 67 லட்சத்து,80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ரூமென்ட் அல்லது பிபிஐகள் (Prepaid Payment Instrument or PPIs) தொடர்பாக ரிசர்வ் வங்கி சில விதிமுறைகளை கூறியிருந்ததாகவும் , அந்த விதிமுறைகளை ஓலா நிறுவனம் மீறியதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டதாகவும். ரிசர்வ் வங்கி தனது செய்திக்குறிப்பில் அறிவித்திருந்தது. மேலும் ஓலா ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் தாங்கள் அனுப்பிய நோட்டீஸுக்கு சரியான பதிலை கூறவில்லை என்றும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.
"ஓலா ஃபைனான்சியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (நிறுவனம்) மீது சில விதிகளுக்கு இணங்காததற்காக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ₹1,67,80,000/- (ஒரு கோடியே அறுபத்து ஏழு லட்சத்து எண்பதாயிரம் ரூபாய் மட்டுமே) அபராதம் விதித்துள்ளது. ஆகஸ்ட் 27, 2021 தேதியிட்ட பிபிஐகளின் முதன்மை வழிகாட்டுதல்கள் (அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டது) மற்றும் முதன்மை வழிகாட்டுதல்கள் மற்றும் 2016 பிப்ரவரி 25, 2016 தேதியிட்ட (அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டது) KYC (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் ) வழிகாட்டல்கள்,முறையாக பின்பற்றப்படவில்லை " என ரிசர்வ் வங்கி தனது செய்திக் குறிப்பில் விளக்கம் அளித்துள்ளது.
பணம் செலுத்துதல் மற்றும் செட்டில்மென்ட் சிஸ்டம்ஸ் சட்டம் 2007, பிரிவு 30ன் கீழ் ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை நடவடிக்கையில் உள்ள குறைபாடுகளைத் தொடர்புடையது என்றும் மேலும் அதன் வாடிக்கையாளர்களுடன் நிறுவனம் மேற்கொண்டுள்ள எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்துடனும் ரிசர்வ் வங்கியின் அபராத நடவடிக்கை தொடர்புடையது அல்ல என்றும் ஆர்பிஐ விளக்கம் கொடுத்துள்ளது. அண்மைக் காலமாகவே அனைத்து வங்கி மற்றும் நிதி சேவை அமைப்புகள் விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுகிறதா என ஆர்பிஐ தீவிரமாக கண்காணித்து வருகிறது.
Also Read : சேவை கட்டணம் எவ்வளவு? ஏன்? SBI வாடிக்கையாளர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை
“KYC தேவைகள் குறித்து ரிசர்வ் வங்கி வழங்கிய உத்தரவுகளுக்கு அந்த நிறுவனம் இணங்கவில்லை என்பது கவனிக்கப்பட்டது” என ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.
இந்த அறிவுறுத்தல்களுக்கு இணங்காததற்காக ஏன் அபராதம் விதிக்கப்படக்கூடாது என்பதற்கான காரணத்தைக் காட்ட அறிவுறுத்தி (show cause notice) ஓலா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது, நிறுவனத்தின் பதிலைப் பரிசீலித்த பிறகு, ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளை ஓலா நிறுவனம் பின்பற்றவில்லை என்ற மேற்கூறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது இதையடுத்து அபராதம் விதிக்கப்பட வேண்டும் என ஆர்பிஐ முடிவு செய்தது.
Also Read : ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வட்டி விகிதம் உயர்வு!
ஓலா எலெக்ட்ரிக் வாகனங்கள் முன்பதிவு தொடங்கும்போது வாடிக்கையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தொடர்ந்து எலெக்ட்ரிக் பைக் எரியும் சம்பவங்களால் அதை வாங்கும் ஆர்வம் குறைந்திருக்கிறது. இதனால் தனது உற்பத்தியையும் அந்நிறுவனம் குறைத்துள்ளது. இந்நிலையில், தற்போது இந்த அபராத விதிப்பிற்குப் பிறகு ஓலாவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது பெரும் கேள்விக்குறியாகி உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ola, Reserve Bank of India