இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய நாளின் ஆரம்பத்திலேயே புதிய உச்சத்துடன் தொடங்கின. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து வரலாறு படைத்துள்ளது. குறிப்பாக மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் ஆரம்பத்திலேயே 60 ஆயிரம் புள்ளிகளைத் தொட்ட நிலையில், தொடர்ந்து அதே நிலையில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டியும் 17,900 புள்ளிகளைக் கடந்து இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது.
இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட எழுச்சி காரணமாக டாடா மோட்டார்ஸ், ஓ.என்.ஜி.சி., இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் எல் அண்ட் டி நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு உயர்ந்துள்ளது. குறிப்பாக ஐ.டி துறையின் பங்குகள் மட்டும் இன்று 1 சதவிகிதம் அளவுக்கு உயர்வடைந்துள்ளன.
1990ம் ஆண்டு தொடங்கி, இன்று வரையிலான சுமார் 31 ஆண்டுகளில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 60 மடங்கு வளர்ச்சியை கண்டுள்ளது.
1990ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி 1000 புள்ளிகளை முதல் முறையாக சென்செக்ஸ் தொட்டது. பின்னர்1992ம் ஆண்டு ஹர்ஷத் மேத்தா மோசடி, 1993ம் ஆண்டு மும்பை பங்குச்சந்தை கட்டிடத்தில் நடந்த குண்டு வெடுப்பு சம்பவம்,1999ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற கார்கில் போர், 2001ம் ஆண்டில் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதல் மற்றும் இந்திய பாராளுமன்ற தாக்குதல் போன்ற பல்வேறு நெருக்கடியான நிலையை இந்திய பொருளாதாரம் சந்தித்ததால், 2006ம் ஆண்டு பிப்ரவரி 6 ம் தேதி தான் சென்செக்ஸ் 10 ஆயிரம் புள்ளிகளை தொட்டது.
அதன் பிறகு, அதிகரிக்க தொடங்கிய சென்செக்ஸ், 2007ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி 20 ஆயிரம் புள்ளிகளை எட்டியது. அதனை தொடர்ந்து, 2008ம் ஆண்டில் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடி, 2009ம் ஆண்டில் வெளியான சத்தியம் நிறுவனம் மோசடி போன்ற காரணங்களால் சரிந்த சென்செக்ஸ், 8 ஆண்டுகள் கழித்து 2015ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி தான் 30 ஆயிரம் புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை அடைந்தது.
அண்மையில் நடைபெற்ற பஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடி, பண மதிப்பு இழப்பு நடவடிக்கையின் தாக்கம் மற்றும் கொரோனாவால் ஏற்பட்ட சரிவு என்று எண்ணற்ற பிரச்சனைகளை கடந்து வந்திருந்தாலும், 2019ம் ஆண்டு மே 23ம் தேதி, 40 ஆயிரம் புள்ளிகளையும், அடுத்த ஒன்றரை வருடத்தில், அதாவது 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 50 ஆயிரம் என்ற உச்சியையும் சென்செக்ஸ் அடைந்தது.
இந்நிலையில், 8 மாத இடைவெளியில், அதாவது செப்டம்பர் 24ம் தேதியே 60 ஆயிரம் என்ற உச்சத்தையும் சென்செக்ஸ் பதிவு செய்துள்ளது. 1000 புள்ளிகளில் இருந்து 60 ஆயிரம் புள்ளிகளை எட்டிய இந்த 31 ஆண்டு காலத்தில், இத்தனை இடர்களுக்கு இடையில், சென்செக்ஸ் சுமார் 60 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Securities, Sensex