பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைக்கப்படுகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டார். அது மட்டுமல்லாமல் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பலன் அடைய கூடிய மற்றொரு முக்கியமான முடிவு குறித்தும் அமைச்சர் அறிவித்தார். அதாவது, விலைவாசி உயர்வால் தவித்து வரும் குடும்பங்களுக்கு நிவாரணம் தரும் வகையில், சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் உயர்த்தப்படுகிறது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அதாவது, பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்களுக்கு இந்த மானிய உயர்வு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
கடந்த மே 21ஆம் தேதி, சனிக்கிழமை அன்று இந்த அறிவிப்புகளை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், “பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தில் இருக்கும் 12 கோடி வாடிக்கையாளர்களுக்கு இந்த ஆண்டும் ரூ.200 மானியம் (12 சிலிண்டர்கள் வரையில்) வழங்க இருக்கிறோம். நமது தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் இது உதவிகரமாக இருக்கும். இதனால், அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.6,100 கோடி செலவாகும்’’ என்று கூறினார். முன்னதாக, கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக உஜ்வாலா திட்டம் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
சிலிண்டரின் தற்போதைய விலை
வீட்டு பயன்பாடு சிலிண்டர் மற்றும் வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் ஆகிய இரண்டின் விலையும் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்தது. டெல்லியில் 14.2 கிலோ கொண்ட வீட்டு பயன்பாடு சிலிண்டர் ரூ.1,003 என்ற விலையில் விற்பனையாகிறது. அரசு வெளியிட்டுள்ள தற்போதைய அறிவிப்பின்படி, உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு மானியத் தொகையாக ரூ.200 வழங்கப்படும். ஆக, அதன் விலை ரூ.803 ஆகும்.
Also Read : ஆஹா!! ஜூலை 1 முதல் மீண்டும் உயர்வு..? மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்!
உஜ்வாலா திட்டம் என்றால் என்ன?
இது இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கும் திட்டமாகும். விறகு அடுப்புகளால் ஏற்படும் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையிலும், ஏழை, எளிய மக்களுக்கு உதவிடும் வகையிலும் கடந்த 2016ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த தொடங்கியது. கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி நிலவரப்படி, நாடெங்கிலும் 9.7 கோடி மக்களுக்கு இலவச சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
மானியம் பெறுவதற்கான தகுதி என்ன?
பட்டியலினம், பழங்குடியினம், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள், தேயிலை தோட்ட பெண் பணியாளர்கள், தீவுகளில் வசிக்கக் கூடிய மக்கள் உள்ளிட்டோர் உஜ்வாலா திட்டத்தில் பயன் அடையலாம்.
விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். இலவச சிலிண்டர் இணைப்பு கோருபவரின் வீட்டில் வேறு யார் பெயரிலும் இணைப்பு இருக்கக் கூடாது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.