எல்ஐசி(LIC) எனப்படும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் இந்தியாவின் முன்னணி பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமாகும். இந்த நிறுவனம் இன்று இந்திய பங்குச்சந்தையில் பட்டியிலிடப்பட்டு, சந்தையில் ஐந்தாவது மதிப்புமிக்க நிறுவனம் என்ற சாதனை படைத்துள்ளது.
மத்திய அரசு எல்ஐசி நிறுவனத்தின் 3.5 சதவீத பங்குகளை பங்குச்சந்தையில் வெளியிட்டு அதன் மூலம் நிதி திரட்ட திட்டமிட்டது. இதற்காக ஐபிஓ (IPO) எனப்படும் ஆரம்பப் பொது பங்களிப்பு தொகைக்கான சந்தா காலம் மே 4ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை திறக்கப்பட்டது. ஒரு பங்கின் ஐபிஓ விலையானது ரூ.902 முதல் ரூ.949 வரை விற்பனை ஆனது. இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட ஐபிஓ விலையான ரூ.949 இல் இருந்து 8.62 சதவீதம் தள்ளுபடி விலையான ரூ.867.20க்கு எல்ஐசியின் ஒரு பங்கின் விலை மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. இதையடுத்து ஆரம்பத்தில் நிர்ணயித்த சந்தை மதிப்பை விட ரூ.42,500 கோடி தொகை இழப்புடன் இன்றைய பங்குச் சந்தையில் எல்ஐசி பட்டியலிடப்பட்டுள்ளது.
பட்டியலிடப்பட்ட எல்ஐசியின் சந்தை மதிப்பு ரூ.5.57 லட்சம் கோடியாகும். இதையடுத்து, சந்தை மதிப்பின் படி இந்தியாவின் ஐந்தாவது பெரிய நிறுவனமாக எல்ஐசி உருவெடுத்துள்ளது. உலகளவில் நிலவும் பொருளாதார சூழல் இந்திய பங்குச் சந்தையில் பாதகமான தாக்கத்தை கடந்த சில வாரங்களாக நிகழ்த்தி வருகிறது. இதன் காரணமாக முதலீட்டாளர்களிடம் அச்சம் எழுந்ததே, எதிர்பார்த்த தொகைக்கு எல்ஐசி பங்குகள் பட்டியலிடப்படாததற்கு காரணம்.
இதையும் படிங்க:
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி! உணர்த்தும் அபாயம் என்ன?
அதேவேளை, நீண்ட காலத்திற்கு சிறப்பான முதலீட்டு திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் எல்ஐசியின் பங்குச்சந்தை மதிப்பை உயர்த்தலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த பங்கு விற்பனை மூலம் எல்ஐசி சந்தாதாரர்களுக்கு ஒரு பங்கின் விலை ரூ.889க்கும், சில்லறை முதலீட்டாளர்களுக்கு ரூ.904க்கு ஒரு பங்கின் விலையும் வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.