கேரளாவில் பெட்ரோல், டீசல் விலையை இரண்டு ரூபாய் உயர்த்தி அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அம்மாநிலத்தில் 2023 - 24 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் கேஎன் பாலகோபால் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் அறிவிப்பின் போது மாநில வருவாயை உயர்த்த பெட்ரோல், டீசல் எரிவாயுக்களுக்கு கூடுதல் வரி விதிப்பதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம் மாநிலத்தில் பெட்ரோல், டீசலின் விலை ரூ.2 உயர்த்தப்படுகிறது.
விலைவாசி உயர்வு அதிகரிப்பதால் மாநில அரசு செலவீனம் அதிகரித்துள்ளதாக கூறிய நிதியமைச்சர் இதன் மூலம் கிடைக்கும் நிதியை சமூக நல பாதுகாப்பு திட்டங்களுக்கு பயன்படுத்தவுள்ளதாகக் கூறினார். கேரளா அரசின் இந்த அறிவிப்பால் அம்மாநிலத்தில் விலைவாசி உயர்வு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அது காய்கறி, மளிகை பொருள்கள் தொடங்கி பெரும்பாலான பொருள்களின் விலையும் உயரும் எனவே, பொதுமக்கள் பெரும் சுமைக்கு ஆளாவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரள அரசின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. அரசு வரி பயங்கரவாதத்தை மக்கள் மீது திணிப்பதாக கேரளா சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான விடி சதீஸன் குற்றஞ்சாட்டியுள்ளார். ஏற்கனவே மாநில மக்கள் கடனில் திணறிவரும் நிலையில், அரசு கூடுதல் வரி சுமையை தருவது மோசமான நடவடிக்கை என அவர் புகார் தெரிவித்துள்ளார்.
தற்போதைய கேரளாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.81 என்ற விலைக்கு விற்பனை ஆகிறது. அதேபோல் அங்கு டீசல் லிட்டர் ரூ.94.74 என்ற விலைக்கு விற்பனை ஆகிறது.இந்த விலையில் இருந்து தான் இரண்டு ரூபாய் விலை அதிகரிக்கிறது. இதன் மூலம் ரூ.750 கோடி கூடுதல் வருவாய் ஈட்ட கேரளா அரசு திட்டமிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.