ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது பயணிகள் விமான சேவையை மீண்டும் தொடங்க, விமான போக்குவரத்து துறை ஆணையம் உரிமம் வழங்கியுள்ளது. சோதனை விமானங்களை வெற்றிகரமாக இயக்கி காட்டியதை அடுத்து ஆணையம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது. மே 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில், விமானப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகளைக் கொண்டு ஐந்து சோதனை விமான சேவைகள் வெற்றிகரமாக இயக்கப்பட்டது.
தொழிலதிபர் நரேஷ் கோயல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் உரிமையாளராக இருந்து நிறுவனத்தை இயக்கி வந்த நிலையில், நிர்வாகக் குளறுபடி, தொழில் போட்டி ஆகியவை காரணமாக ஜெட் ஏர்வேஸ் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி திவாலானது. பின்னர் இந்நிறுவனத்தை மறு சீரமைப்பு செய்து இயக்கத்தை தொடக்க 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த தொழிலதிபரான முராரி லால் ஜலான் என்பவரின் காரல்லாக் கேப்பிடல் என்ற கூட்டமைப்பு முன்வந்தது.
இந்நிலையில், இந்த கூட்டமைப்பின் முயற்சியால் தேவையான நிர்வாக சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது சோதனை ஓட்டம் வெற்றிகரமாக செய்யப்பட்டு உரிமம் பெற்ற நிலையில், தனது பயணிகள் விமான சேவையை ஜூலை - செப்டெம்பர் மாத காலாண்டில் தொடங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக முராரி லால் ஜலான் கூறுகையில், 'இன்றைய தினம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு மட்டுல்ல, இந்திய விமான போக்குவரத்து சேவைக்கே புதிய அத்தியாயமாகும். இந்த விமான சேவையை வெற்றிகரமானதாக மாற்றவும், ஜெட் ஏர்வேஸ் பிராண்டின் மதிப்பை தக்க வைக்கவும் நாங்கள் தொடர் முயற்சி செய்கிறோம். இதற்கா NCLT, மத்திய விமான போக்குவரத்து துறை, விமான போக்குவரத்து ஆணையம் உள்ளிட்ட பலருக்கு நன்றி தெரிவிக்கிறோம்' என்றார்.
இதையும் படிங்க:
HOME LOAN: கனவு வீட்டை அடைய கைக்கொடுக்கும் வங்கிகள்! மிஸ் பண்ணிடாதீங்க!
நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் இன்னும் சில நாள்களில் நியமிக்கப்பட்டு, இயக்கத்திற்கு தேவையான ஊழியர்களும் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள் என நிறுவனத்தின் தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெட் ஏர்வேஸ்சின் முன்னாள் ஊழியர்களுக்கு இதில் முக்கியத்துவம் வழங்கப்படும் எனவும் கருதப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.