நாட்டில் வணிகம் செய்வதற்கான சுமார் 33,000-க்கும் மேற்பட்ட இணக்கங்கள் (compliances), மத்திய அமைச்சகங்கள் / துறைகள் மற்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றால் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன, மறுசீரமைக்கப்பட்டுள்ளன அல்லது டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. இவை இந்தியாவில் எளிதாக வணிகம் செய்வதை ஊக்குவிக்கின்றன என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் கூறி இருக்கிறார்.
கடினமான வழிகாட்டுதல்கள் அல்லது இணங்குவதற்கான விதிமுறைகள் காரணமாகப் பல சிறு மற்றும் குறு தொழில்கள் மூடப்படும் அபாய நிலைக்குத் தள்ளப்படுவதை மத்திய அரசு அறிந்திருக்கிறதா? என்ற கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் சோம் பிரகாஷ் மேற்கண்ட தகவலை நாடாளுமன்றத்தில் தெரிவித்து உள்ளார். தொடர்ந்து பேசிய அமைச்சர் மத்திய அரசானது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து வணிகங்களின் இணக்கச் சுமையைக் குறைக்கச் செயல்பட்டு வருகிறது. இதன் நோக்கம் கவர்மென்ட் டூ பிசினஸ் இன்டர்ஃபேஸ்களை (government-to-business interfaces) எளிமைப்படுத்துதல், சீரமைத்தல், டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் குற்றமற்றதாக்குதல் ஆகிய நடவடிக்கைகளின் மூலம் வணிகம் செய்வதை எளிதாக்குவது மற்றும் மேம்படுத்துவதாகும் என்று கூறி இருக்கிறார்.
Also Read : இந்தியாவில் விற்கப்படும் உலகின் விலை உயர்ந்த மாம்பழம்... எவ்வளவு தெரியுமா?
முக்கியமாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் வரை சுமார் 22,000 இணக்கங்கள் குறைக்கப்பட்டுள்ளன, சுமார் 13,000 இணக்கங்கள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன, 1,200-க்கும் மேற்பட்ட செயல்முறைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. மேலும் குற்றங்கள் எனக் கூறப்பட்ட சுமார் 103 இணக்கங்கள் நீக்கப்பட்டன மற்றும் 327 தேவையற்ற விதிகள் / சட்டங்கள் நீக்கப்பட்டன என்று தொழில்துறை வளர்ச்சிக்கான தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (Department for Promotion of Industry and Internal Trade) சில மாதங்களுக்கு முன் தகவல் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் இந்தியாவில் வணிகம் செய்வதை ஒழுங்குபடுத்தும் சுமார் 69,233 தனித்துவ இணக்கங்களில், 26,134 இன்னும் வணிக சட்டங்களுக்கு இணங்காததற்காக அபராதங்களாக உள்ளன. இது தொழில்முனைவோரைச் சிறையில் தள்ளக் கூடிய அளவிற்கான விதிமுறைகளாக இருக்கின்றன என்று TeamLease RegTech-ன் ஒரு அறிக்கை கூறுகிறது.
உலக வங்கியின் வர்த்தகம் செய்யும் தரவரிசையில் 2015-ல் 142-வது இடத்திலிருந்த இந்தியா 2020-ல் 63-வது இடத்தில் உள்ளது. வணிகம் செய்யும் சூழலை மேம்படுத்துவதற்கான பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதன் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மதிப்பிடும் அரசாங்கத்தின் வணிக சீர்திருத்த நடவடிக்கைத் திட்டம் 2020-ன் படி, சிறந்த சாதனையாளர்களாக ஆந்திரா, குஜராத், ஹரியானா, கர்நாடகா, பஞ்சாப், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதனிடையே நாட்டில் வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கான சீர்திருத்தச் செயல்முறையை மேலும் அதிகரிக்கப் பல புதிய சீர்திருத்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சீர்திருத்தங்களை விரிவுபடுத்துவதற்கான நேரம் இது என்று குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.