2020 - 21ம் நிதியாண்டின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறோம். கொரோனா அச்சுறுத்தல் நிலவி வரும் சூழலில் சில திட்டங்களுக்கு மார்ச் 31ம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை செய்ய மறந்திருந்தீர்கள் என்றால், எஞ்சிய நாட்களுக்கு அதற்காக நேரம் ஒதுக்கி, காலவகாசம் முடிவடையும் தருவாயில் இருக்கும் திட்டங்களை செய்துவிடுங்கள். இல்லையென்றால் அபராதம் மற்றும் நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.
மார்ச் 31 வரை மட்டுமே காலவகாசம் உள்ள திட்டங்கள்
பான்கார்டு - ஆதார் இணைப்பு
பான் கார்டு மற்றும் ஆதார் இணைப்புக்கு மார்ச் 31ம் தேதி வரை மட்டுமே காலவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்கனவே மத்திய அரசு இரண்டு முறை காலவகாசம் கொடுத்துள்ளது. இந்நிலையில், மீண்டும் ஒருமுறை காலவகாசம் கொடுக்கப்படுமா? என்ற கேள்வி இருப்பதால், இதுவரை பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் உடனடியாக சென்று அதற்கான வேலைகளில் ஈடுபடுவது நல்லது. ஆதார் கார்டு இணைக்கப்படாத பான் கார்டுகள் வருமானவரித்துறையால் செயலிழப்பு செய்யப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதார் கார்டு இணைக்கப்பட்ட பின்னர் கார்டு மீண்டு ஆக்டிவேட் செய்யப்படும்.
ஐ.டி.ஆர் தாக்கல்
2019 -20ம் நிதி ஆண்டுக்கான திருத்தப்பட்ட அல்லது தாமதமான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் மார்ச் 31ம் தேதியாகும். இதுவரை வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் அல்லது திருத்தப்பட்ட வருமான வரியை செலுத்துபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். தாமதமாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். 5 லட்சம் வரையிலான வருவாய்க்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே அபராதம் வசூலிக்கப்படும்.
Also read... Gold Rate: சவரனுக்கு ரூ.136 உயர்ந்தது தங்கத்தின் விலை... மாலை நிலவரம் என்ன?
எல்.டி.சி பயணச் சலுகை
எல்.டி.சி பயணச் சலுகை என்பது மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு கணக்கிடப்பட்டு கொடுக்கப்படுகிறது. பதவியின் தன்மைக்கு ஏற்ப ஊழியர்கள் தங்களின் விடுமுறைக் கால பயணச் செலவை, தகுந்த ஆவணங்களை சமர்பித்து அரசிடம் பெற்றுக்கொள்ளலாம். பயணம் மேற்கொள்ளாதவர்கள் 12 விழுக்காடு மற்றும் அதற்கு மேலான ஜி.எஸ்.டி உடைய பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். இதற்கான ஆவணங்களை மார்ச் 31ம் தேதிக்குள் சமர்பித்தால், அவர்களுக்கான எல்.டி.சி தொகையை பெற்றுக்கொள்ளலாம். எல்.டி.சியின் கீழ் வாங்கும் பொருட்களுக்கு வரிச்சலுகையும் உண்டு.
அவசர கால கடனளிப்பு திட்டம் (ECLGS)
கொரோனா காலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுகுறு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு அவசரகால கடனளிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதற்காக 3 லட்சம் கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சிறு குறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், ஆவணங்களை முறையாக சமர்பித்து உத்தரவாதம் இல்லாத அவசர கால கடனை பெற்றுக்கொள்ளலாம். இதற்கான காலவகாசம் மார்ச் 31 ஆகும்.
விவாட் சே விஸ்வாஸ்
நிலுவையில் உள்ள வருமானவரி தொடர்பான வழக்குகள் மற்றும் சிக்கல்களை தீர்க்கும் விதமாக விவாட் சே விஸ்வாஸ் என்ற திட்டத்தை மத்திய அரசு மார்ச் 2020 ஆம் ஆண்டு தொடங்கியது. இதன்மூலம் நிலுவையில் உள்ள வருமானவரி சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டு வரியை செலுத்தலாம். இதுதொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள அறிவிப்பில், மார்ச் 31 ஆம் தேதிக்குள் விவாட் செ விஸ்வாஸ் திட்டத்தின் கீழ் வரித்தாக்கல் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Income tax