தொழில்நுட்பக் கோளாறின் காரணமாக HDFC வங்கியின் ஆன்லைன் சேவை இன்று இரண்டாம் நாளாக முடங்கியுள்ளது.
HDFC நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் சேவை நேற்று திங்கள் கிழமை முதல் தொழில்நுட்பக் கோளாறின் காரணமாக சரி வர இயங்கவில்லை. இதுகுறித்த புகார்கள் நேற்று சமூக வலைதளங்களில் பரவலாகக் காணப்பட்டன. HDFC வங்கி வாடிக்கையாளர்கள் இதனால் பெரிய சிரமங்களை சந்தித்து வருவதாகவும் பதிவிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து HDFC வங்கி வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பில், “தொழில்நுட்பக் கோளாறின் காரணமாக நெட் பேங்கிங் சேவை மற்றும் மொபைல் பேங்கிங் ஆப் சேவை தற்காலிகமாக முடங்கியுள்ளது. எங்களது தொழில்நுட்ப வல்லுநர்கள் துரித கதியில் செயல்பட்டு வருகின்றனர். இன்னும் சில மணி நேரத்தில் இந்தப் பிரச்னையைத் தீர்த்துவிடுவோம் என நம்புகிறோம். சிரமத்திற்கு மன்னிப்பு கோருகிறோம்” என்றுள்ளது.
மாதத்தின் முதல் வாரத்தில் சம்பளம் வரும் நேரம், மாதாந்திர செலவுகள் உள்ள நேரம் இதுபோன்ற பிரச்னையால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். HDFC வங்கியின் சுமார் 45 மில்லியன் வாடிக்கையாளர்கள் பணப் பரிவர்த்தனைகள் ஏதும் செய்ய முடியாது சிரமப்பட்டு வருகின்றனர். HDFC வங்கியின் பங்குகள் இன்று காலை 0.8 சதவிகித வீழ்ச்சியில் பயணித்துக் கொண்டிருந்தது.
மேலும் பார்க்க: ஜிஎஸ்டி மூலம் உங்கள் வீட்டு பட்ஜெட்டில் 320 ரூபாய் மிச்சமாவது தெரியுமா..?
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.