ஜிஎஸ்டி வரியில் உள்ள 5 சதவீத பிரிவை நீக்கி அதில் உள்ள பொருள்களை 3 அல்லது 8 சதவீதத்தில் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய, மாநில அரசு பிரதிநிதிகள் பங்கேற்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இதில் ஜிஎஸ்டி வரி விதிப்பில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் தொடர்பான முடிவுகள் எட்டப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நிலையில், 5, 12, 18 மற்றும் 28 ஆகிய சதவீதங்களில் ஜிஎஸ்டி வரி பிரிக்கப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் நகை பொருள்களுக்கு மட்டும் 3 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், 5 சதவீத வரிப் பிரிவை நீக்கி, அதில் உள்ள பொருள்களை 3 சதவீதம் மற்றும் 8 சதவீதங்களில் இணைக்க அரசு திட்டமிட்டுள்ளது. மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பெருவாரியான பொருள்களை 3 சதவீதத்திலும், மீதமுள்ள பொருள்களை 8 சதவீதத்திலும் சேர்க்க திட்டமிட்டுள்ளது.
also read : இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பதற்கு முன்பு இந்த விஷயங்களை கவனிக்க மறந்து விடாதீர்கள்!
அத்துடன், 5 சதவீதத்தை ஏழோ, எட்டோ, அல்லது ஒன்பது சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய மாநில நிதியமைச்சர்கள் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும். 5 சதவீத வரியில் ஒரு சதவீதம் உயர்ந்தால் கூட அது ஆண்டுக்கு கூடுதலாக ரூ.50,000 கோடி வருவாய் அரசுக்கு கிடைக்கும். தற்போது 5 சதவீத வரியில் இருக்கும் பொருள்களை 8 சதவீத பிரிவில் மாற்றவும் கவுன்சில திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டது. இந்த ஜிஎஸ்டி வரி நடைமுறையில் அத்தியாவசிய பொருள்களுக்கு மிகக் குறைந்த வரியும், ஆடம்பர பொருள்களுக்கு அதிகபட்ச வரியான 28 சதவீதமும் விதிக்கப்படுகிறது.
ஜிஎஸ்டி அமலுக்கு வந்தபின் மாநில அரசுகள், தொழில் வர்த்தக துறையினரின் கோரிக்கையை ஏற்று பல மாற்றங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. உதாரணமாக, தொழில்துறையினரின் கோரிக்கையை ஏற்று 28 சதவீத வரிப்பட்டியலில் ஆரம்பத்தில் இருந்த 228 பொருள்களை 35க்கும் கீழ் குறைத்துள்ளது. இந்த ஜிஎஸ்டி காரணமாக மாநில அரசுக்கு ஏற்படும் இழப்புகளை 2022 ஜூன்
மாதம் வரை மத்திய அரசு ஏற்கும்.
மாநிலங்களின் அடிப்படையில் ஜிஎஸ்டி வரி வசூலில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. குஜராத் இரண்டாம் இடத்திலும், கர்நாடகா மூன்றாம் இடத்திலும், தமிழ்நாடு நான்காம் இடத்திலும் உள்ளன.
- கண்ணன் வரதராஜன்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.