கடந்த பிப்ரவரி 1ம் தேதியன்று பாராளுமன்றத்தில் 2023 - 24ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் முதல் முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நெட்வொர்க் 18 குழுமத்திற்கு பிரத்யேக நேர்க்காணல் அளித்துள்ளார். நெட்வொர்க் 18 குழும முதன்மை செய்தி ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு நிர்மலா சீதாராமன் அளித்துள்ள பிரத்யேக நேர்காணலில் நாட்டின் பொருளாதாரம் சரியான திசையில் செல்வதுடன், சவால்கள் நிறைந்த காலகட்டமாக இருந்தபோதிலும், பிரகாசமான எதிர்காலத்தை நோக்கிச் செல்வதாக தெரிவித்தார்.
உலகளவில் அனைத்து நாடுகளும் பொருளாதார தேக்க நிலையை சந்தித்து வருகின்றன. அதன் தாக்கம் மக்களை பாதிக்காதவாறு இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
கொரோனா கால நெருக்கடி:
தொடர்ந்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் கொரோனா பரவல் போன்றதொரு சூழ்நிலையை கையாள எனக்கு முன் எந்த முன்மாதிரியும் இல்லை. எடுத்துக்காட்டுகளும் இல்லை. அனைத்து தரப்பிரனருடனும் இது தொடர்பாக பேசவேண்டியிருந்தது. நாட்டில் யாரும் பசியுடன் இருந்துவிடக்கூடாது என்பதற்காக 80 கோடி பேருக்கு இலவச உணவுப் பொருள் விநியோகம் செய்யப்பட்டது.
சுற்றுலாவுக்கு கை கொடுக்கும் - PM விகாஸ் திட்டம்:
2023 நிதியாண்டுக்கான பட்ஜெட்டிலிருந்து எதிர்பார்க்கப்படும் செயலாக்கங்களுள் சுற்றுலா துறையில் பெரிய மாற்றங்களை நான் எதிர்பாக்கிறேன். குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்திருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கு இது சிறந்ததாகும்.
பிஎம் விகாஸ் திட்டத்தில் ஒரு வேகத்தை காண்கிறேன். பெரிதளவிலான சந்தையை சுற்றுலாதுறை கொண்டிருப்பதால் கைவினைஞர்களுக்கு கைகொடுக்க தொடங்கப்பட்டுள்ள பிஎம் விகாஸ் திட்டத்தின் மூலம் பெரும்பான்மையான மக்களுக்கு பலன் கிடைக்கும்.
மேலும் படிக்க : Exclusive : அனைத்து துறைகளிலும் மாற்றம் ஏற்படும் வகையில் பட்ஜெட் தயாரிப்பு - நிர்மலா சீதாராமன்
பங்குச்சந்தைகளில் எழுச்சி:
இந்த பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் கவர்ச்சிகரமான ‘புதிய வருமான வரி முறை’ நடுத்தர வர்க்கத்தினருக்கு பலனளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்குமானது இந்த பட்ஜெட். இதனுடைய உடனடி தாக்கம் வரும் நாட்களில் சந்தையில் எதிரொலிக்கும். அதானி விவகாரத்தால் வீழ்ச்சி அடைந்த இந்திய பங்குச்சந்தைகள் தற்போது எழுச்சியை சந்தித்துள்ளன. அதானி விவகாரத்தால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஏற்றுமதி, இறக்குமதி மாற்றத்தால் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்துள்ளது என்றும், மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் தொடர் நடவடிக்கைகளால் பண வீக்கம் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி குறைப்பு:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு நிதியை குறைத்ததற்கு காரணம் இருக்கிறது. இது மக்களின் தேவை அடிப்படையிலான திட்டம். 100 நாள் வேலை பணியாளர்கள் தற்போது பிரதமர் வீட்டு வசதி திட்டப்பணி வேலைகளுக்காக செல்கின்றனர் என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.