நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போதிலும் பிரதமர் மோடி விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றார் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மத்திய பாஜக அரசு 3 வேளாண் சீர்தித்த சட்டங்களை கொண்டு வந்தது. விவசாய விளைபொருட்கள் சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாத ஒப்பந்தம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கும் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. டெல்லி எல்லைகளில் பஞ்சாப், ஹரியானா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த சட்டங்களை எதிர்த்து ஓராண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இதற்கிடையில், இந்த சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என பிரதமர் நரேத்திர மோடி கடந்த நவம்பர் மாதம் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது முறைப்படி தீர்மானம் கொண்டு வரப்பட்டு சட்டம் திரும்பப் பெறப்பட்டது.
இந்நிலையில், நெட்வொர்க் 18 செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இந்த விவகாரம் தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து கூறியுள்ளார். தலைமை செய்தி ஆசிரியர் ராகுல் போஸ் எழுப்பிய கேள்விக்கு நிர்மலா சீதாராமன் அளித்த பதில்-
விவசாயிகளின் நலனுக்காகத்தான் மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டங்கள் முறையாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் செய்யப்பட்டன. இருப்பினும் இதனை எதிர்த்து சில விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தின.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போதிலும் கூட, சில விவசாய அமைப்புகளின் நலனின் அக்கறை கொண்ட பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றார். இது அவருடைய பெருந்தன்மையை காட்டுகிறது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. நாம் எப்போதெல்லாம் சீர்த்திருத்தம் பற்றி எண்ணுகிறோமோ அப்போதெல்லாம், பிரதமர் மோடியின் நடவடிக்கை நம் நினைவுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.