தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (EPF)வட்டி 8.5 சதவீதத்தில் இருந்து 8.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 5 கோடிப்பேருக்கு பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ், வட்டிக் குறைப்பை அறிவிக்கும் போது, “அறிவிப்பது மகிழ்ச்சி இருக்கிறது” என்று கூறியது சர்ச்சையாகியுள்ளது.
இந்த வட்டி விகிதம் குறைப்பானது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவானதாகும். கடந்த 1977-78-ம் ஆண்டின்போது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8 சதவீதமாக குறைக்கப்பட்டு இருந்தது. தற்போது வெளியாகியிருக்கும் வட்டி குறைப்பு தொடர்பான அறிவிப்பு தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய அமைச்சர் ‘அறிவிக்கவே நன்றாக இருக்கிறது’ என்று கூறி வெறுப்பேற்றியிருப்பது பலரது கண்டனங்களை ஈர்த்துள்ளது.
மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் தொடர்ச்சியாக 2015-16-ல் பாஜக் ஆட்சியிலும் 8.80% ஆக வட்டி விகிதம் இருந்தது அதிகபட்சமாகும்.
கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மத்திய அமைச்சரின் ‘அறிவிப்பதே இனிக்கிறது’ அறிவிப்பு குறித்து ராஷ்ட்ரிய லோக் தள் ஜெயந்த் சவுத்ரி, "பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் காயங்களில் உப்பை தடவுவத் நன்றாக இருக்கிறதா?" என்று கேள்வி எழுப்பினார்.
மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ், “2021-22 ஆம் ஆண்டிற்கான EPF சேமிப்பின் மீதான 8.1% வட்டி விகிதம் என்பது, ஒப்பீட்டளவில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிலுள்ள 10 வருட நிலையான வைப்புத்தொகை 5.4% வருவாயை விட அதிகம், மேலும் பொது வருங்கால வைப்புநிதி போன்ற சேமிப்புக் கருவிகளின் மீதான வருமானம் 6.8% முதல் 7.1 % வரைதான் உள்ளது, எனவே இபிஎஃப் வட்டி 8.1% என்பதை அறிவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.