டெஸ்லா நிறுவனம் மற்றும் அதன் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் ஆகியோரை இந்தியாவுக்கு வரவேற்போம்; ஆனால் ஆத்மநிர்பார் பாரத் அல்லது தற்சார்பு இந்தியா என்ற கொள்கையில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று மத்திய அமைச்சர் மஹேந்திர நாத் பாண்டே தெரிவித்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனம் டெஸ்லா ஆகும். அந்நிறுவனத்தின் கார்கள் மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்று இந்திய அரசை எலான் மஸ்க் வலியுறுத்தி வருகிறார். இந்தியாவில் கார்களை விற்பனை செய்யவும், விற்பனை செய்யப்பட்ட கார்களுக்கான சர்வீஸ் மையங்களை திறக்கவும் தயாராக உள்ள டெஸ்லா நிறுவனம், இங்கு உற்பத்தி ஆலையை தொடங்க முன்வரவில்லை. டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் கடந்த மாதம் இந்தக் கருத்தை கூறியிருந்தார்.
இதுகுறித்து டிவிட்டரில் எலான் மஸ்க் வெளியிட்ட பதிவில், “முதலில் எங்களை கார்களை விற்கவும், சர்வீஸ் செய்யவும் அனுமதிக்க வேண்டும். அப்படி அனுமதி அளிக்காத உலகின் எந்தப் பகுதியிலும் நாங்கள் உற்பத்தி ஆலையை அமைக்க மாட்டோம்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
தற்சார்பு இந்தியாவில் சமரசம் செய்ய முடியாது - மத்திய அரசு
இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற கொள்கைக்கு டெஸ்லா நிறுவனம் ஒத்து வராத நிலையில், அவர்களுடைய காரை இங்கு நேரடி மையம் மூலமாக விற்பனை செய்ய அனுமதிப்பதில்லை என்று மத்திய அரசு ஏற்கனவே கூறியிருந்தது.
கடந்த சனிக்கிழமை டிவி9 செய்தித் தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய கனரக தொழில்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை அமைச்சர் மஹேந்திர நாத் பாண்டே பேசினார். அப்போது, “ஆத்மநிர்பார் என்னும் தற்சார்பு இந்திய கொள்கையை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அதி வேகமாக செயல்படுத்தி வருகிறது. அந்தக் கொள்கைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆத்மநிர்பார் கொள்கையில் சமரசம் செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை’’ என்று கூறினார்.
Also Read : Electric Vehicle வாங்கினால், வரி விலக்கு பெறலாம் – வருமான வரிச்சட்டத்தில் புதிய பிரிவு
இந்திய கொள்கைகளை ஏற்க வேண்டும்
இந்திய அரசின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே டெஸ்லாவையும், எலான் மஸ்கையும் வரவேற்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக, இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய உள்ளதாகவும், அந்த நடவடிக்கை வெற்றி பெறும் பட்சத்தில் இங்கு உற்பத்தி ஆலையை அமைக்க திட்டமிட்டு வருவதாகவும் எலான் மஸ்க் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கூறியிருந்தார்.
Also Read : குறைந்த பட்ஜெட் விலையில் வாங்க கூடிய தரமான டாப் 5 ஸ்கூட்டர்கள்..!
100 சதவீத இறக்குமரி வரி
தற்போதைய சூழலில் இந்தியாவில் எந்த ஒரு உதிரி பாகமும் கூட உற்பத்தி செய்யப்படாமல் முழுவதுமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களில் ரூ.30 லட்சம் மதிப்புக்கு மேற்பட்ட கார்களுக்கு 100 சதவீத இறக்குமதி வரியும், மற்ற கார்களுக்கு 60 சதவீத இறக்குமதி வரியும் இந்தியா வசூலித்து வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.