ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த இரு வாரமாக முடங்கியுள்ளன. இந்நிலையில், மக்களவை இன்று காலை கூடியது. பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதன் காரணமாக ராகுல் காந்தியின் எம்.பி பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கேள்வியெழுந்த நிலையில், ராகுல் காந்தி மக்களவை நடவடிக்கையில் கலந்து கொண்டார்.
அவை கூடியதும் காங்கிரஸ் எம்பிக்கள் ராகுல் காந்தியை பேச அனுமதிக்க கோரி அமளியில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். அதன்பிறகு அவை கூடியதும் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரியும், ராகுல் காந்திக்கு அநீதி இழைப்பதை நிறுத்தக் கோரியும் பதகைகளை ஏந்தியபடி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க:ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை எதிர்த்து போராடுவோம் - காங்கிரஸ்
எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் நிதி மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், அரசு ஊழியர்களின் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைகள் வந்திருப்பதாகக் கூறினார். எனவே, ஓய்வூதியம் தொடர்பான பிரச்னையை ஆராய நிதிச் செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கவும், அரசு ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அணுகுமுறையை உருவாக்கவும் பரிந்துரைப்பதாகக் கூறினார்.
இந்த அணுகுமுறையை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து 45 திருத்தங்களுடன் நிதி மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்பின் மக்களவை வரும் 27-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.