2014 இல் பதவி ஏற்றத்தில் இருந்து பிரதமர் மோடி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமை மன் கி பாத் உரை நிகழ்த்தி வருகிறார். அப்படி அவர் பேசிய உரையில் தமிழ்நாடு பற்றிய தகவல்களே அதிகம் இடம்பெற்றிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமை ரேடியோ மூலம் மக்களிடம் பேசும் பிரதமர், வெவ்வேறு மாநிலங்களில் நடந்த சம்பவங்கள், சிறப்பாக செயலாற்றும் நபர்கள், பாரம்பரியங்களை பற்றி மேற்கோள் காட்டி பேசி வருகிறார். இதுவரை முடிந்துள்ள 99 உரைகளில் இந்தியாவில் அனைத்து மாநிலங்களைப் பற்றியும் பேசியுள்ளார்.
அதோடு நாளை மறுநாள் -ஞாயிற்றுக்கிழமை 100 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட உள்ளது. இந்த சிறப்பு நிகழ்விற்கு முன்னர் இதுவரை ஒலிபரப்பப்பட்ட உரைகள் பற்றி ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், பிரதமர் மோடியின் இதுவரையிலான உரையில் பிற மாநிலங்களைவிட தமிழ்நாடு, தமிழ் கலாசாரம், தமிழர்களின் தனித்திறன்கள் போன்றவை அதிகம் எடுத்துரைக்கப்பட்டு உள்ளன என்பது தெரியவந்துள்ளது.
இதில் முக்கியமான விஷயங்களை குறிப்பெடுத்து உள்ளனர். "உலகின் பழமையான மொழியான தமிழ் தங்களது நாட்டைச் சேர்ந்தது என்பதில் ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளவேண்டும். ஆனால் அழகான இந்த உலக புகழ்பெற்ற மொழியை நான் கற்கவில்லை என்பதில் வருத்தம் கொள்கிறேன்" என்று மோடி கூறியுள்ளார்.
அதுமட்டும் அல்லாமல் அவரது உரையில் திருக்குறளின் சிறப்பம்சங்கள், அவ்வையார் பாட்டு, சங்க இலக்கிய பாடல் வரிகள் சேர்க்கப்பட்ட தமிழ்மொழியை போற்றும் பல வாசகங்கள் அதில் இடம்பெற்று உள்ளன. அதுமட்டும் அல்லாமல் தமிழக மக்களின் செயல்களும் பலமுறை குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய ஜனநாயக மரபை உத்திரமேரூர் கல்வெட்டு அப்போதே எடுத்து இயம்பியதை சுட்டிக்காட்டிய மோடி தமிழகத்தின் வில்லுப்பாட்டு உள்ளிட்ட கிராமப்புற கலைகளை எடுத்துரைத்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் வேலூரில் நாகை நதியை மீட்டெடுக்க 20 ஆயிரம் பெண்கள் ஒன்றுபட்டது, தூத்துக்குடி மாவட்டத்தில் புயலை தடுத்து, மண்ணைக் காக்க பனைமரங்கள் நடுவது போன்ற பெண்களின் முயற்சிகளை மோடி தனது உரையில் பாராட்டியுள்ளார்.
தமிழக விவசாயிகளை பலமுறை புகழ்ந்துள்ளார். 'சுகன்யா சம்ரித்தி' திட்டத்தின் கீழ் 175 குழந்தைத் திருமணங்களைத் தடுக்கவும், பெண்களுக்காக சுமார் 60 ஆயிரம் கணக்குகளைத் தொடங்கவும் முயற்சித்த கடலூர் மக்களின் முயற்சிகளை பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க : தன் பாலின திருமணம்... நாடாளுமன்றத்தில் முடிவெடுக்கலாம்... உச்சநீதிமன்றம் கருத்து..!
சென்னையைச் சேர்ந்த சுசித்ரா ராகவாச்சாரியின் வேண்டுகோளை ஏற்று, குடிமக்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார். மதுரையில் சலூன் கடை நடத்தி வரும் கே.சி.மோகன் தனது மகளின் கல்விக்காக சேமித்த ரூ.5 லட்சத்தை ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சேவைக்காக கொரோனா காலத்தில் செலவு செய்ததை பாராட்டி குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டும் இல்லாமல் பீடித் தொழிலாளி யோகநாதனின் மகள் பளு தூக்குதலில் தங்கப்பதக்கம் பெற்றதை பாராட்டியுள்ளார். தமிழ்நாட்டின் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், ராம்சர் தளமாக அறிவிக்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்தார். தமிழகத்தின் வாழைப்பழங்கள், தஞ்சாவூர் பொம்மை போன்ற புவிசார் பொருட்களை பற்றியும் மேற்கோள் காட்டியுள்ளார்.
இப்படி பல்வேறு விஷயங்களில் தமிழ்நாட்டின் சிறப்புகளை பிரதமர் மோடி வானொலி உரையில் குறிப்பிட்டுள்ளார். இந்த வாரம் வரும் 100 ஆவது உரையிலும் தமிழகத்தை பற்றி மேற்கோள்கள் இருக்குமா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mann ki baat, Modi