முகப்பு /செய்தி /இந்தியா / News18 Rising India | ‘புதின், ஜெலன்ஸ்கிக்கு மோடி சொன்ன சேதி…’ - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

News18 Rising India | ‘புதின், ஜெலன்ஸ்கிக்கு மோடி சொன்ன சேதி…’ - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

News18 Rising India | இந்தியாவுடனான உறவை வளர்ப்பதில் ரஷ்யா அதிக ஆர்வம் காட்டும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

  • Last Updated :
  • Chennai, India

நெட்வொர்க்18-ன் ரைசிங் இந்தியா மாநாட்டில் பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், 2022 ரஷ்யா - உக்ரைன் போருக்குப் பிறகு மேற்கத்திய நாடுகளுடனான உறவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் ரஷ்யா தற்போது கிழக்கு நோக்கி திரும்பும் என்று  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஜெய்சங்கர், இந்தியாவுடனான உறவை வளர்ப்பதில் ரஷ்யா அதிக ஆர்வம் காட்டும். சர்வதேச உறவுகளில் இது மிகவும் நிலையான உறவுகளில் ஒன்றாக அமையும். மேற்கு நாடுகளுடனான ரஷ்யாவின் உறவு மாறிவிட்டதால், ஆசியாவுடனான ரஷ்யாவின் உறவும் அதன் விளைவாக மாற்றம் காணும். இது நீண்ட காலமாக, வரலாற்றில் செய்ததை விட அந்நாடு கிழக்கு நோக்கி திரும்ப முனையும் என்று கூறினார். அதே நேரத்தில், சோவியத் யூனியன் உடைந்த போதிலும், ரஷ்யா மற்றும் இந்தியா உறவுகள் வலுவாக இருந்ததையும் மத்திய அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்த போரானது எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளை வெளிகொண்டு வந்துள்ளதாகவும் கூறிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், இது உலகை மிகவும் கடினமான தருணமாக மாற்றியுள்ளதாகவும் கூறினார். சிரமங்கள் இருந்தபோதிலும், இந்தியா சுதந்திரமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்றும், அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தையை தொடரவும், அமைதியை நிலைநாட்டவும் வலியுறுத்தியது என்றும் ஜெய்சங்கர் கூறினார்.

ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இருவருக்கும் பிரதமர் மோடி வழங்கிய செய்தி என்னவென்றால், பேச்சுவார்த்தை மேஜைக்கு திரும்ப வேண்டும் என்பதுதான். எங்களால் ஏதாவது செய்ய முடிந்தால், நாங்கள் செய்ய தயாராக இருக்கிறோம் என்று ஜெய்சங்கர் கூறினார். நாம் இணைப்பு பாலமாக உள்ளதால் உலகிற்கு நம்மைப் போன்றவர்கள் தேவை என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

போரில் சீனாவின் பங்கு குறித்து பேசிய ஜெய்சங்கர், சீனாவின் முதன்மை பொருளாதார பங்குதாரரே மேற்கத்திய நாடுகள் என்றும், பெய்ஜிங்கிற்கும் மேற்கிற்கும் இடையிலான உறவுக்கு ஒரு பொருளாதார முகம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். அதே வேளையில், ரஷ்யா-ஆசியா உறவுகள் தீவிரமடையும் எனவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

First published:

Tags: External Minister jaishankar, NEWS18 RISING INDIA, Russia - Ukraine