வானொலி வழியாக ஒலிபரப்பாகும் மனதின் குரல் நிகழ்ச்சியின் 99வது அத்தியாயத்தில் பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார். அப்போது, பிறந்து 39 நாட்களில் மாரடைப்பால் உயிரிழந்த குழந்தை மற்றும் விபத்தில் உயிரிழந்த 63 வயது பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது குறித்து குறிப்பிட்டார். அவர்கள் குடும்பத்துடன் தொலைபேசியில் உரையாற்றினார்.
மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 2013ஆம் ஆண்டில் நாட்டில் 5,000 குறைவாக இருந்த உடல் உறுப்பு தானத்தின் எண்ணிக்கை, தற்போது 15 ஆயிரம் ஆக உயர்ந்துள்ளதாக கூறினார். மேலும், நாட்டின் எந்த மாநிலத்திற்கும் சென்று உறுப்புகளைப் பெற நோயாளிகள் பதிவு செய்யலாம் என்று கூறிய பிரதமர், 65 வயதுக்கு கீழ் உள்ளவர்களே உறுப்பு தானம் செய்ய முடியும் என்ற வரம்பை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறினார்.
மேலும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் முதல் பெண் லோகோ பைலட் என்ற சாதனையை படைத்த சுரேகா, ஆஸ்கர் வென்ற தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஆவண படத்தின் தயாரிப்பாளர் குணீத் மோங்கா, இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ், வேதியியல் பொறியியல் துறையில் IUPAC இன் சிறப்பு விருது வென்ற பாபா அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ஜோதிர்மயி உள்ளிட்டோருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார். நாட்டின் கனவுகளுக்கு பெண்கள் ஆற்றலைத் தந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசியவர், காசி-தமிழ் சங்கமம் போன்று "ஒரே பாரதம் உன்னத பாரதம்" திட்டத்தின் கீழ் அடுத்த மாதம் 17ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் சௌராஷ்டிரா-தமிழ் சங்கமம் நடைபெறவுள்ளதாக கூறினார்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சௌராஷ்டிராவைச் சேர்ந்த பலர், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடியேறினர் என்றும், இன்றும் சௌராஷ்டிராவில் தமிழர்களின் உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை மற்றும் சடங்குகளை காணமுடியும் என்றும் அவர் தெரிவித்தார். சௌராஷ்டிரா-தமிழ் சங்கமம் குறித்து தனக்கு மதுரையை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் கடிதம் எழுதி உள்ளதாகவும் அதில், ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, சௌராஷ்டிர-தமிழ் உறவுகளைப் பற்றி முதன்முறையாக ஒருவர் சிந்தித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
அடுத்தடுத்து ரமலான், ராம நவமி என பண்டிகைகள் வரும் நிலையில், அதிகரித்து வரும் கொரோனாவை கருத்தில் கொண்டு, அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Modi, Modi Radio speech, PM Modi