குடிமைப் பணி தொடர்பான அதிகாரங்கள் டெல்லி அரசின் கைகளிலே இருக்கும் என்ற உச்ச நீதிமன்ற அரசியல் அமைப்பு அமர்வு வழங்கிய தீர்ப்பை இல்லாநிலை ஆக்கும் வகையில் மத்திய அரசு அவசரச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவசரச் சட்டத்தின் மூலம் நீர்த்து போகச் செய்யும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் டெல்லி யூனியன் பிரதேசமாக உள்ளது. பிரிவு 239ன் கீழ் யூனியன் பிரதேசங்களை குடியரசுத் தலைவர் ஆளுநர் மூலம் நிர்வாகம் செய்வர். அவ்வாறு, அமரத்தப்படும் ஆளுநர் அமைச்சரவையைச் சார்ந்து இல்லாமல் தன்னிச்சையாக தனது பதவிப் பணிகளை ஆற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், டெல்லி தலைநகர மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் 1991ம் ஆண்டு கொண்டு அரசியமைப்பு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன் கீழ், டெல்லி என்பது தேசிய தலைநகர் ஆட்சி நிலவரை (National Capital Territory of Delhi) என்று வழங்கப்பெற்றது. இந்த சட்டத் திருத்தம் தான், டெல்லி தலைநகருக்கு சட்டமன்றப் பேரவையை கொண்டு வந்தது. நேரடித் தேர்தல் நடத்தப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேண்டும் என்றும், முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட அமைச்சரவை இருக்க வேண்டும் என்றும் இந்த சட்டத் திருத்தம் தெரிவிக்கிறது.
தமிழ்நாடு, கேரளா போன்ற இதர சட்டப்பேரவைகள் போலவே, டெல்லி சட்டமன்றத்திற்கும் சட்டங்கள் இயற்ற இந்திய அரசியலமைப்பு அதிகாரம் வழங்குகிறது. இருப்பினும், மாநிலப் பட்டியலில் உள்ள 1, 2, 18 (சட்டம் ஒழுங்கு, காவல்துறை, நிலம்)ஆகிய பிரிவுகளின் மீது சட்டங்கள் இயற்ற டெல்லி சட்டப்பேரவைக்கு அதிகாரம் கிடையாது. இந்த மூன்று பட்டியல்களின் கீழ் சட்டங்கள் இயற்றுவதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு தரப்பட்டுள்ளது.
எனவே கூட்டாட்சி தத்துவத்தின் படி, சட்டம் ஒழுங்கு, காவல்துறை, நிலம் ஆகிய பொருட்பாடுகளுக்கு மட்டுமே துணை நிலை ஆளுநர் அமைச்சரவையை சாராது பதவிப் பணிகளை ஆற்ற வேண்டும். இதர அனைத்து விவகாரங்களிலும் அமைசச்சரவையின் விருப்பத்தின்/அறிவுரையின் பேரிலே செயல்பட வேண்டும் என்று பொருள்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. சட்டம் ஒழுங்கு, காவல்துறை, நிலம் ஆகியவற்றுடன் குடிமைப் பணி சேவைகளையும் துணை நிலை ஆளுநர் பதவிபணிக்குள் கொண்டு வந்தது. பொதுவாக, குடிமைப்பணி நிர்வாகம் என்பது மாநில பட்டியலில் இருக்கக் கூடியதாகும்.
இதையும் வாசிக்க: ஐந்து தேர்தல் வாக்குறுதி எப்போது நிறைவேற்றம்... கர்நாடக முதல்வர் சித்தராமையா முக்கிய அறிவிப்பு
பணியாளர் தேர்வாணையங்கள் மூலம் குடியுரிமைப் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்கின்றன. உதாரணமாக, தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் மீதான ஒழுங்குமுறை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், டெல்லியில் உள்ள குடிமைப் பணியாளர்கள் ( The Delhi, Andaman & Nicobar, Lakshadweep, Daman and Diu and Dadra and. Nagar Haveli (Civil) - சுருக்கமாக DANICS - அதிகாரிகள்) பெரும்பாலும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர்.
இதரன் காரணமாக, குடிமைப் பணிகளை துணை நிலை ஆளுநரின் கீழ் கொண்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்தது.
வழக்கு:
கடந்த 2019ம் ஆண்டு இது தொடர்பான வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, மாறுப்பட்ட கருத்தை அளித்தனர். நீதிபதி ஏ.கே.சிக்ரி தனது தீர்ப்பில், அரசு நிர்வாகத்தில் இணைச் செயலர் மற்றும் அதற்கு மேல் உள்ள அதிகாரிகளின் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆகியவை துணைநிலை ஆளுநரின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும் ஏனைய அதிகாரிகள் டெல்லி அரசின் கீழ் வருவார்கள் என்றும் தெரிவித்தார். மறுபுறம், நீதிபதி அசோக் பூஷன், நிர்வாக சேவைகள் முற்றிலும் டெல்லி அரசின் வரம்புக்கு அப்பாற்பட்டவை என்று தெரிவித்தார்.
இதையும் வாசிக்க: திடீர் கனமழையால் நிலச்சரிவு.. சிக்கிமில் சிக்கித் தவித்த 500 சுற்றுலாப் பயணிகளை மீட்ட ராணுவம்!
இந்த முரண்பாடுகளை களைய, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்த வழக்குசென்றது. பின்னர், 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்றப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தனது தீர்ப்பை அளித்தது. தீர்ப்பில், நீதிபதி அசோக் பூஷன் கருத்தில் உடன் படவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள் சட்டம் ஒழுங்கு, காவல்துறை, நிலம் ஆகிய விவகாரங்கள் தவிர, அனைத்து குடியுரிமை சேவைகள் மீது சட்டங்கள் இயற்றி செயல்படுத்துவதற்கு டெல்லி அரசுக்கு அதிகாரம் இருப்பதாக தெரிவித்தனர்.
அவசரச் சட்டம்:
இந்நிலையில், குடிமைப் பணி தொடர்பான அதிகாரங்கள் டெல்லி அரசின் கைகளிலே இருக்கும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பயன்றறது ஆக்கும் வகையில் மத்திய அரசு அவசரச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இந்த அவசர சட்டத்தின் கீழ், டெல்லி முதல்வர், தலைமைச் செயலர் (மத்திய உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்படும் அதிகாரி), தில்லி அரசின் உள்துறைச் செயலர் (துணை நிலை ஆளுநரால் நியமிக்கப்படுபவர் ) ஆகியோர் அடங்கிய தேசிய தலைநகர் குடிமைப் பணி ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. டெல்லி அரசில் பணிபுரியும் குரூப் ‘ஏ’ மற்றும் யூனியன் பிரதேச (DANICS Officers) அதிகாரிகளின் இடமாற்றம், பதவி பொறுப்பு குறித்து இந்த ஆணையம் முடிவெடுக்கும்.
இருப்பினும், பதவி பொறுப்பு குறித்து ஆணையம் பரிந்துரைத்தாலும், துணை நிலை ஆளுநர் ஒருவேளை அதற்கு முரண்பட்டால், அவரின் முடிவே மேலோங்கும்/உறுதியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Delhi