போலி ஆவணங்களை தயாரித்து கட்டாக்கைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த வாரம் ஒடிசாவில் நடந்த இந்தியாவின் கோர ரயில் விபத்தில் தனது கணவர் இறந்துவிட்டதாக கூறி விபத்தில் இறந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ. 17 லட்சத்தை இழப்பீடாகக் கோரிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் 2ஆம் தேதி மாலை மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த ரயில் விபத்து, உயிரிழப்புகளின் அடிப்படையில் மிக மோசமான ஒன்றாக கருதப்படுகிறது. அதிகாரப்பூர்வ தகவலின்படி, 288 பயணிகள் இந்த விபத்தில் கொல்லப்பட்டதோடு, சுமார் 900 பேர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், மத்திய ரயில்வே அமைச்சகத்திடமிருந்து ரூ. 10 லட்சமும், பிரதமர் மோடியின் அலுவலகத்திலிருந்து ரூ. 2 லட்சமும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் அலுவலகத்திலிருந்து ரூ. 5 லட்சமும் சேர்த்து ரூ.17 லட்சமும் அறிவிக்கப்பட்டது.
அதனையடுத்து, ஒடிசா மாநிலம் கட்டாக்கைச் சேர்ந்த பெண் ஒருவர், உயிருடன் இருக்கும் தனது கணவர் ரயில் விபத்தில் உயிரிழந்துவிட்டதாக கூறி போலி ஆவணங்களை வைத்து நிவாரணம் கோரியுள்ளார். சம்மந்தப்பட்ட அந்த பெண்ணின் கணவர் விஜய் தத் தானே தனது மனைவி போலி ஆவணங்களை வைத்து தான் இறந்துவிட்டதாக பொய்யாக கூறி நிவாரணம் பெற முயன்றார் என மணியபந்தா காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
தன் மீது கணவர் புகார் அளித்ததை அறிந்த அப்பெண் தலைமறைவானதால் போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் அடிப்படையில், குற்றஞ்சாட்டப்பட்ட அந்த பெண் தனது கணவர் என்று கூறி வேறு ஒரு சடலத்தை அடையாளம் காட்டியதாக தெரிவித்தனர்.
கடந்த ஜூன் 2ஆம் தேதி, பெங்களூரு-ஹவுரா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை விபத்துக்குள்ளானது. முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், ரயில்வே அமைச்சகம் நேற்று முன்தினம் இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தது. புள்ளிவிவரங்களின் அடிப்படையில், கடந்த 10 ஆண்டுகளில் ரயில் விபத்து வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு கையிலெடுத்து விசாரிப்பது இது மூன்றாவது முறையாகும். கடந்த 2010ஆம் ஆண்டில் ஞானேஸ்வரி விபத்து குறித்து சிபிஐ விசாரணை செய்தது, பின் 6 ஆண்டுகளுக்குப் பிறகு கான்பூர் ரயில் விபத்து குறித்து என்ஐஏ விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. விபத்தில் சிக்கி உயிரிழந்த 288 பேரில், 205 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன, மீதமுள்ள 83 பேரின் உடல்கள் எய்ம்ஸ்-புவனேஸ்வர் மற்றும் பிற மருத்துவமனைகளில் அடையாளம் காண வைக்கப்பட்டுள்ளதாக ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் குமார் ஜெனா தெரிவித்துள்ளார்.
Also Read : அரசு ஊழியர்களுக்கு அட்வான்ஸாக மாத சம்பளம்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ராஜஸ்தான் அரசு!
மேலும், சிறப்பு குற்றப்பிரிவு இணை இயக்குநர் விப்லவ் குமார் சவுத்ரி தலைமையிலான 6 சிபிஐ அதிகாரிகள் குழு, மெயின் லைன் மற்றும் லூப் லைனை ஆய்வு செய்ததுடன், சிக்னல் அறைக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டனர். ரயில்கள் இருப்பதைக் கண்டறியும் எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு மத்திய புலனாய்வு அமைப்பு இந்த வழக்கை கையிலெடுத்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, இந்த விபத்துக்குப் பின்னால் நாசவேலை ஏதேனும் இருந்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Odisha, Train Accident