பாம்பை கண்டால் படையே அஞ்சி நடுங்கும் என்றொரு பழமொழி உண்டு. அதிலும் பாம்பு கடித்துவிட்டால் பாதிக்கப்பட்டவருக்கும், அவரை சுற்றியுள்ள நபர்களுக்கும் என்ன செய்வது என்றே தெரியாமல் பதற்றம் தொற்றிக் கொள்ளும். உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் மட்டுமே அவர்களுடைய உயிரை காப்பாற்ற இயலும்.
கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்டத்தின் புத்தூர் என்ற பகுதியில் தாய் ஒருவரை பாம்பு கடித்த நிலையில் அவரது மகள் துரிதமாக செயல்பட்டு தாயின் உயிரை காப்பாற்றியுள்ளார். ஷ்ராமியா ராய் என்ற அந்தப் பெண் தனது தாயின் காலில் வாய் வைத்து விஷத்தை உறிஞ்சி கீழே துப்பி விட்டார். இவர் கல்லூரி மாணவி ஆவார்.
இந்தப் பெண்ணின் தாயார் மமதா கிராம ஊராட்சி மன்ற உறுப்பினராக உள்ளார். விவசாய வேலைக்காக தோட்டத்திற்கு சென்ற அவர் அங்கு மோட்டார் ஆன் செய்துவிட்டு வீட்டுக்கு புறப்பட தயாரானார். அப்போது வயலில் எதிர்பாராத விதமாக பாம்பு ஒன்றை மமதா மிதித்து விட, அது அவரது காலில் கொத்தி விட்டது.
மேலும் படிக்க : Ph.D வாத்தியார் டூ ஜூஸ் கடை தொழில்.. அசத்தி வரும் தஞ்சை ஆசிரியர்..!
விஷம் உடலின் முக்கிய பாகங்களுக்கு பரவுவதை தடுக்கும் வகையில் உடனடியாக அருகாமையில் இருந்த காய்ந்த புற்களை எடுத்து பாம்பு கடித்த இடத்திற்கு மேலே இறுக கட்டினார். இந்த நிலையில் மற்றவர்களுக்கும் தகவல் பரவிவிட அங்கு மமதாவின் மகள் ஷ்ராமியா உள்பட பலரும் வந்து விட்டனர். தாயின் உடலில் விஷம் பரவுவதை தடுக்க, அவரது காலில் போடப்பட்டுள்ள புல்கட்டு மட்டுமே போதுமானது அல்ல என்பதை மமதாவின் மகள் ஷ்ராமியா உணர்ந்தார்.
இதையடுத்து தாயாரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பாக பாம்பு கடிபட்ட அவரது காலில் வாயை வைத்து விஷத்தை அந்தப் பெண் உறிஞ்சி எடுத்து கீழே துப்பினார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த பெண் தக்க சமயத்தில் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக மமதாவின் உயிர் காப்பாற்றப்பட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க : புதுவையில் இடுகாட்டில் நடந்த சமாதி திருவிழா.. இறந்த உறவினர்களுக்கு படையல்!
தான் படிக்கும் கல்லூரியில் ஷ்ராமியா ஸ்கவுட் இயக்கத்தில் சேவை புரிந்து வருகிறார். பாம்பு கடியில் இருந்து தாயாரை தக்க தருணத்தில் காப்பாற்றிய அவருக்கு அங்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திரைப்படம் ஒன்றில் பாம்பு கடித்தவர்களின் உடலில் இருந்து விஷத்தை உறிஞ்சி துப்பும் காட்சி ஒன்றை மனதில் வைத்து அதேபோன்ற காரியத்தை மேற்கொண்டதாக ஷ்ராமியா தெரிவித்தார்.
முதலுதவி சிகிச்சை
செய்தியில் தொடர்புடைய பெண், பாம்பு கடித்த இடத்தில் இறுக கட்டு போட்டிருந்தார் என்றாலும், உண்மையில் அதுபோல செய்யக் கூடாது. ஏனெனில் அந்த இடத்தில் ரத்த ஓட்டம் பாதிக்கும். இதனால் அப்பகுதி அழுகிப்போக வாய்ப்பு உண்டு.
பாம்பு கடித்த இடத்தில் முதலில் சோப் மற்றும் தண்ணீர் வைத்து நன்றாக கழுவ வேண்டும். பாம்பு கடித்த இடத்தில் மஞ்சள், சாணம் போன்றவற்றை தடவக் கூடாது. பாம்பு எப்போது கடித்தது என்ற நேரத்தை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். முடிந்தவரை கடித்தது என்ன பாம்பு என்பதை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
அதேபோல, தனியார் மருத்துவமனையை காட்டிலும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வது நல்லது. கடித்த இடத்தில் வீக்கம் இருப்பின் ஐஸ்கட்டி வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.