பாஜக ஆட்சியில் உள்ள மாநிலமான கர்நாடகாவில் வரும் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மே 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. தேர்தலுக்கான தேதி நெருங்கியுள்ளதால் அரசியல் கட்சிகளின் இறுதிக்கட்ட தேர்தல் பரபரப்புரை தற்போது சூடு பிடித்துள்ளது.
ஆளும் பாஜக அரசு மீதான அதிருப்தியை பயன்படுத்தி மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர காங்கிரஸ் கட்சி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது. தற்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் மல்லிகார்ஜுன கார்கேவின் சொந்த மாநிலம் கர்நாடகா. அவர் தொடங்கி முன்னாள் முதலமைச்சரான சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் கட்சியை வெற்றிபெற வைக்க கடும் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் தேசிய தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், கட்சியின் முன்னாள் தலைவரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தி இன்று மாலை கர்நாடகாவில் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளில் சோனியா காந்தி தேர்தல் பரப்புரை செய்வது இதுவே முதல் முறை. இதற்கு முன்னர் 2019 மக்களவை தேர்தலின் போது தான் சோனியா காந்தி கடைசியாக பரப்புரை செய்தார். இந்நிலையில், இன்று மாலை ஹூப்பள்ளி - தார்வாட் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் சோனியா பங்கேற்கிறார்.
இதையும் படிங்க: "நான் ஒரு பைசா ஊழல் செய்தாக நீங்கள் கண்டுபிடித்தால் என்னை தூக்கில் போடுங்கள்.." - பிரதமருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சவால்
இதில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட கட்சியின் முன்னணி தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். இதற்கிடையில் பெங்களூருவில் இன்று பிரதமர் நரேந்திர மோடியும் பிரம்மாண்ட சாலை பேரணியை தொடங்கி பங்கேற்றுள்ளார். முன்னணி தலைவர்களின் வருகையால் கர்நாடகா தற்போது தேர்தல் ஜுரத்தில் உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.