கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால், கட்சி மேலிட அறிவுரைப்படி ஆட்சியமைப்பதற்கு அனைத்து வழிகளையும் பின்பற்றுவோம் என்று பாஜக மூத்த தலைவரும், அமைச்சருமான அசோகா தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவி வரும் சூழலில், யாருக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், நிச்சயம் ஆட்சியமைப்போம் என்று அம்மாநில வருவாய்த் துறை அமைச்சர் அசோகா உறுதிபடத் தெரிவித்துள்ளார். ஆட்சியமைக்க தேவையான இடங்கள் கிடைக்காவிட்டால், கட்சி மேலிடத் தலைவர்களின் வழிகாட்டுதல்படி ஆட்சியமைப்பதற்கான மாற்று திட்டத்தை செயல்படுத்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன்மூலம், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெறும் சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடக் கூடும் என்று எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பியுள்ளன. இதேபோன்று காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே சிவக்குமார் ‘கை’ ஆப்ரேசன் என்ற பெயரில் மாற்றுக் கட்சி எம்.எல்.ஏக்களை இழுக்க திட்டமிட்டுள்ளதாகவும்,
பாஜக சார்பில் வெற்றி பெறும் எம்.எல்.ஏக்கள் பலர் காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்கக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமியுடன் பாஜக மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மதசார்பற்ற ஜனதா தளக் கட்சி தலைவர் குமாரசாமி நேற்று சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவர் நாளை காலை பெங்களூரு திரும்ப உள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் பாஜக அல்லது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். அதேநேரம் தனது நிபந்தனைகளை ஏற்கும் கட்சிக்கு மட்டுமே ஆதரவு அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அரசை வழிநடத்துவதில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கவும், நீர்வளத் துறை, பொதுப்பணித் துறை இலாகாக்களை கேட்டுப் பெறவும் குமாரசாமி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆவிகளுடன் பேசவைப்பதாக சொன்னார்... சென்னையில் மாந்த்ரீகத்தை நம்பி ரூ.7 கோடியை இழந்த மென்பொறியாளர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Karnataka Election 2023