ராகுல் காந்தியின் அரசியல் வாழ்வை அசைத்துப் பார்க்கும் வகையில் அவருக்கு எதிரான அவதூறு வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது. இதனால் ராகுல் சந்திக்கப் போகும் அரசியல் ரீதியான பின்னடைவு என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வரப்போகும் மக்களவை தேர்தல் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அரசியல் திருப்பங்கள் தற்போது நிகழ்ந்துள்ளன. 2019-இல் அவருக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் 2 ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் சூரத் நீதின்றம் அளித்த உத்தரவின்படி 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை ராகுல் காந்தி அனுபவிக்க வேண்டும். ஆனால் அவர் உடனடியாக சிறை செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்வதற்கு 30 நாட்கள் அவகாசம் ராகுலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தண்டனைக் காலம் 2 ஆண்டுகள் கழித்து மேலும் 6 ஆண்டுகளுக்கு அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பார். ஒட்டுமொத்தமாக 8 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்படும். மேல் முறையீட்டிலும் தண்டனை உறுதி செய்யப்பட்டால் 2024 மற்றும 2029 தேர்தல்களில் அவரால் போட்டியிட முடியாது. 2034 பொதுத் தேர்தலில்தான் அவரால் போட்டியிட வாய்ப்புள்ளது. தற்போது ராகுலுக்கு 52 வயதாகும் நிலையில் அவர் 63 வயதில்தான் அடுத்து நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவரது அரசியல் வாழ்வில் பெரும் பின்னடைவு தற்போது ஏற்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
யதார்த்தத்தில் பார்க்கும்போது 2024 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் என்ற தகுதியில் இருந்து ராகுல் காந்தி விலகியுள்ளார். உயர்நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்படும் மேல் முறையீட்டில் சூரத் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யும் உத்தரவு வந்தால், ராகுல் காந்தி மீதான தகுதி நீக்கம் ரத்தாகும். சூரத் நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்யப்பட்டால் அவரால் 2034 பொதுத்தேர்தலில்தான் போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இன்னொரு பக்கம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எந்த தலைவரை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சி தேர்தலை எதிர்கொள்ளப் போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போதுள்ள சூழலில் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சச்சின் பைலட் அல்லது சசி தரூர் ஆகியோரில் ஒருவரே காங்கிரசால் முன்னிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rahul Gandhi