கோடை காலம் வந்துவிட்டாலே மாம்பழ சீசனுக்கு குறைவிருக்காது. மாம்பழத்தின் சுவைக்கு கட்டுப்படாத மனிதர்களும் இருக்க முடியாது. தமிழர்களைப் பொருத்தவரையில் முக்கனிகளில் ஒன்றாக மாம்பழம் இருக்கிறது. அதேபோல பிற மாநிலங்களிலும், உலக நாடுகளிலும் மாம்பழம் மிக விரும்பி சாப்பிடும் பழ வகைகளில் ஒன்றாக உள்ளது.தமிழகத்தின் சேலம், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்கள் மாம்பழ சாகுபடிக்கு பெயர்பெற்றதாக இருக்கின்றன.
அதேபோல ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட பகுதிகள் மாம்பழத்திற்கு பிரசித்தி பெற்றதாக உள்ளன. அந்த வகையில் மேற்கு வங்க மாநிலத்தின், மால்டா பகுதியில் விளையும் மாம்பழங்களுக்கு பெரும் வரவேற்பு உண்டு.மாம்பழ விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாகவும், பொதுமக்களிடம் மாம்பழம் சார்ந்த பொருள்களை சந்தைப்படுத்தும் வகையிலும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதிய யோசனையை முன்னிறுத்தினார். அதாவது மாம்பழத்தை பல உணவுப் பொருட்களில் சேர்த்து, மதிப்பு கூட்டு விற்பனையை மேம்படுத்துமாறு அவர் அறிவுறுத்தினார்.
அதன் அடிப்படையில், பல்வேறு உணவுப் பொருட்களை மாம்பழ சுவையுடன் தயாரித்து மாவட்ட நிர்வாகத்திடம் வியாபாரிகள் சமர்ப்பிக்க தொடங்கினர். இதற்கு அங்கு பெரும் வரவேற்பு காணப்படுகிறது. ரசகுல்லா, ரசக்தம்பா, காஜு பர்ஃபி உள்ளிட்ட இனிப்பு வகைகளில் மாம்பழம் சேர்க்கப்படுகிறது. அதேபோல தயிரிலும் கூட மாம்பழத்தின் மனம் மற்றும் சுவையை வியாபாரிகள் புகுத்தியுள்ளனர்.
Read More : மது அருந்திய இளம்பெண் சுட்டுக்கொலை... பஞ்சாப்பில் அதிர்ச்சி சம்பவம்..!
முதலில் சோதனை அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த உணவுப் பொருட்கள் அனைத்தையுமே இனி வரும் காலங்களில் பெருமளவுக்கு தயாரித்து அசத்துவதற்கு வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து பிபாஸ் சர்தார் என்ற வியாபாரி கூறுகையில், “முதல்வர் மம்தா பானர்ஜி அறிவுறுத்தியதன்படி புதிய உணவுப் பொருள்களை தயாரிப்பதில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். பல இனிப்புகளை மாம்பழத்தை சேர்த்து தயாரித்து வருகிறோம்.
மக்களிடம் வரவேற்பை பெரும் அளவுக்கு இன்னும் கூடுதலான இனிப்புகளை மாம்பழத்தின் சுவையில் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறோம். எங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய மால்டா மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வர்த்தகர் சங்கம் ஆகியோருக்கு எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று கூறினார்.
கண்காட்சி : மாம்பழத்தில் தயாரான உணவுப் பொருட்களை கொண்டு கண்காட்சி ஒன்றை மால்டா மாவட்ட நிர்வாகம் நடத்தியிருக்கிறது. அதில் 12 விதமான இனிப்புகளை வியாபாரிகள் காட்சிப்படுத்தியிருந்தனர். மேற்கு வங்கத்தின் பிரசித்தி பெற்ற இனிப்புகளான ரசகுல்லா, கீர் மலாய் போன்றவை மாம்பழ சுவையில் தயாராகியிருந்தன. இந்த இனிப்புகளை இன்னும் கூடுதல் தரத்தில் தயாரிக்கும் வகையில் வியாபாரிகளுக்கு பயிற்சி அளிக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.மாம்பழத்தில் தயாரிக்கப்படும் இனிப்புகளை மக்களிடையே பிரபலப்படுத்தும் நோக்கில் இதற்கென பிரத்யேக திருவிழா ஒன்றை நடத்தவும் மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mamata Banerjee, Trending