புழக்கத்தில் உள்ள ரூ.2,000 மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை திருப்பப் பெறுவதாக அறிவிப்பு ஒன்றை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. வரும் 23ம் தேதி முதல், பொதுமக்கள் தங்கள் கைவசமுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30, 2023 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் அலுவலகங்கள் அல்லது வங்கிக் கிளைகளில் ஒப்படைத்து, அவரவருக்குரிய வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் அல்லது வேறு பணத் தாள்களாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
இது 2016ஆம் ஆண்டு நம்பவர் 8ஆம் தேதி வெளியான பணமதிப்பு நீக்க நடவடிக்கை போன்ற நடவடிக்கையோ என சில மக்கள் பீதிக்குள்ளாகி இருக்கின்றனர். ஆனால், பொதுமக்கள் தேவையற்ற பீதியடைய வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுவாக கிராமப்புறங்களில் தற்போது மக்கள் ரூ.500, ரூ,200 மற்றும் ரூ.100 நோட்டுகளின் புழக்கம் தான் உள்ளன.
பெரும்பாலான கிராமப்புறங்களில் ரூ.2000 நோட்டுகள் புழக்கம் இல்லை. பெரும்பான்மை மக்களிடம் ஒரு ரூ.2000 நோட்டு கூட இருக்க வாய்ப்பு இல்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அவர், அரசு 4 மாத கால அவகாசம் கொடுத்துள்ளது. எனவே, யாரிடமாவது ரூ.2,000 நோட்டு இருந்தால் கூட அதை வங்கிகளில் டெபாசிட் செய்யவோ அல்லது மாற்றிக்கொள்ளவோ முடியும்.
கடந்த 6 ஆண்டுகளாக யூபிஐ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வெகுவான வளர்ச்சி கண்டுள்ளதால் பெரும்பாலானோர் ரூ.2000 நோட்டு பயன்படுத்துவதில்லை என்றார். தற்போது புழக்கத்தில் உள்ள 89%க்கும் அதிகமான 2000 ரூபாய் நோட்டுகள் 2017ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முந்தைய காலத்தில் அச்சிடப்பட்டவை. பொதுவாக, ரூபாய் நோட்டுகளின் ஆயுட்காலம் 4-5 ஆண்டுகள் வரையாகும்.
எனவே, தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் தங்களது ஆயுட் காலத்தை நெருங்குகின்றன. நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெற ஓராண்டுகாலமே உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: திருப்பதி லட்டுக்களின் எடை குறைப்பு... கவுண்ட்டர்கள் மூலம் பக்தர்களிடம் விற்பனை செய்து மோசடி... 4 பேர் கைது
பெரும்பணக்காரர்கள் பலர் ரூ.2,000ஐ பதுக்கி வைத்திருந்தால், அதை இப்போது வங்கி செலுத்த வெளியே கொண்டுவந்துதான் ஆக வேண்டும். சமீபத்தில் வருமான வரித்துறை, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சோதனையில் பல இடங்களில் ரூ.2,000 நோட்டுகள் பதுக்கி வைத்திருந்தது கைப்பற்றப்பட்டது. எனவே, இதுபோன்ற பதுக்கல்களை வெளியே கொண்டு வர இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ரிசரவ் வங்கியின் தகவல் படி, 2018 மார்ச் 31 அன்று ரூ.6.73 லட்சம் கோடியாக (புழக்கத்தில் உள்ள நோட்டுகளில் 37.3%) இருந்த நிலையில் 2023 மார்ச் 31ல் இந்த ரூ.2000 நோட்டு புழக்கம் எண்ணிக்கை வெறும் 10.8% ஆக மட்டுமே குறைந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.3.62 லட்சம் கோடியாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank accounts, RBI