சட்டம் ஒழுங்கு, காவல்துறை, நிலம் ஆகிய பொருட்பாடுகள் தவிர, அனைத்து குடியுரிமை சேவைகள் மீது சட்டங்கள் இயற்றி செயல்படுத்துவதற்கு டெல்லி தேசிய தலைநகருக்கு (சுருக்கமாக டெல்லி) அதிகாரமாக இருப்பதாக இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், டெல்லியின் துணை நிலை ஆளுநர், பொது ஒழுங்கு, காவல், நிலம் ஆகியவற்றைத் தவிர, முதலமைச்சரை கொண்ட அமைச்சரவையின் பரிந்துரையின் பேரிலே தனது பணியை ஆற்ற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசியல் அமைப்புச் சட்டம் கீழ், யூனியன் பிரதேசமாக இருந்த டெல்லி, 1991ஆம் ஆண்டு தேசிய தலைநகர் ஆட்சிநிலவரை (National Capital Territory of Delhi) என்று வழங்கப்பெற்றது. மேலும், தலைநகருக்கான சட்டமன்றப் பேரவையை கொண்டு வந்தது. தமிழ்நாடு போன்ற மாநில சட்டப்பேரவை போலவே, தேசிய தலைநகர ஆட்சி நிலவரை முழுவதும் சட்டங்கள் இயற்ற டெல்லி சட்டமன்ற பேரவைக்கு இந்திய அரசியலமைப்பு அதிகாரம் வழங்குகிறது. இருப்பினும், மாநிலப் பட்டியலில் உள்ள 1, 2 , 18 (சட்டம் ஒழுங்கு, காவல்துறை, நிலம்)ஆகிய பொருட்பாடுகள் மீது சட்டங்கள் இயற்ற டெல்லி சட்டப்பேரவைக்கு அதிகாரம் கிடையாது. இந்த மூன்று பட்டியல்களின் கீழ் சட்டங்கள் இயற்றுவதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு தரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநில அரசின் பொது நிர்வாகத்தில் குடிமைப்பணி முக்கிய பங்கு வகிக்கின்றன. பணியாளர் தேர்வாணையங்கள் மூலம் குடியுரிமைப் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்கின்றன. அந்த வகையில், டெல்லி அரசுக்கு மத்திய அரசு ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணி அதிகாரிகள் டெல்லி அரசின் அதிகார எல்லைக்குள் வருவார்களா? என்ற கேள்வி எழுந்தது.
கடந்த 2019ம் ஆண்டு இது தொடர்பான வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, மாறுப்பட்ட கருத்தை அளித்தனர். நீதிபதி ஏ.கே.சிக்ரி தனது தீர்ப்பில், அரசு நிர்வாகத்தில் இணைச் செயலர் மற்றும் அதற்கு மேல் உள்ள அதிகாரிகளின் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆகியவை துணைநிலை ஆளுநரின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும்; ஏனைய அதிகாரிகள் டெல்லி அரசின் கீழ் வருவார்கள் என்றும் தெரிவித்தார். மறுபுறம், நீதிபதி அசோக் பூஷன், நிர்வாக சேவைகள் முற்றிலும் டெல்லி அரசின் வரம்புக்கு அப்பாற்பட்டவை என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க; மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றம்... யார் யாருக்கு எந்தெந்த துறைகள் ஒதுக்கீடு?
இந்த முரண்பாடுகளை களைய, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்த வழக்குசென்றது . பின்னர், 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்றப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தனது தீர்ப்பை வாசித்தது. தீர்ப்பில், நீதிபதி அசோக் பூஷன் கருத்தில் உடன் படவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள் சட்டம் ஒழுங்கு, காவல்துறை, நிலம் ஆகிய பொருட்பாடுகள் தவிர, அனைத்து குடியுரிமை சேவைகள் மீது சட்டங்கள் இயற்றி செயல்படுத்துவதற்கு டெல்லி தேசிய தலைநகருக்கு (சுருக்கமாக டெல்லி) அதிகாரமாக இருப்பதாக தெரிவித்தனர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Supreme court