அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு காமெங் மாவட்டம் பாம்டிலா அருகே நேற்று காலை பறந்து கொண்டிருந்த சீட்டா ரக ஹெலிகாப்டர், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது. இதையடுத்து பாதுகாப்பு படைகளின் 5 குழுக்கள் தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில், மண்டலா என்ற இடத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது.
இந்த விபத்தில் விமானி வினய் பானு ரெட்டி, துணை விமானி மேஜர் ஜெயந்த் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ராணுவம் கூறியுள்ள நிலையில், மேஜர் ஜெயந்த் தேனியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அவரது உடல், டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 4 மணிக்கு மதுரை கொண்டுவரப்பட்டு, பெரியகுளம் அருகே உள்ள அவரது சொந்த ஊரான ஜெயமங்கலத்தில் அடக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் ஜெயந்தின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராணுவ வீரர் ஜெயந்த் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக தெரிவித்துள்ளார். ராணுவ வீரர் மேஜர் ஜெயந்த்திற்கு வீர வணக்கம் செலுத்துவதாகவும் ராணுவ வீரரின் பிரிவால் வாடும் சக ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இரங்கல் தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, Helicopter, Helicopter Crash