போதைப் பொருள் வைத்திருந்ததாக கூறி பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அப்துல்லா அய்யுப் என்பவர் 20 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். இந்த வழக்கில் அவர் வைத்திருந்தது போதைப் பொருள் (ஹெராயின்) இல்லை என்பதும் அது சாதாரணமாக கடைகளில் கிடைக்கும் பவுடர் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை விடுதலை ‘செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எந்த தவறும் செய்யாமல் போலீசாரின் தனிப்பட்ட விரோதம் காரணமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவருக்கு நேர்ந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அப்துல்லா அய்யூப் என்பவர் 2003 மார்ச் 14 ஆம் தேதி 25 கிராம் ஹெராயின் போதைப் பொருள் வைத்திருந்த புகாரின் பேரில் கைது செய்யப்படுகிறார்.
முதற்கட்ட விசாரணை மற்றும் தீர்ப்பின் அடிப்படையில் அவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. இதிலிருந்து விடுதலையாக அய்யூப் சட்டப் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், அவர் வைத்திருந்தது சாதாரண பவுடர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கிலிருந்து அவரை நீதிமன்றம் விடுவித்துள்ளது.
இதுகுறித்து அய்யூப் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பிரேம் பிரகாஷ் ஸ்ரீவத்சவா கூறியதாவது- அய்யூபின் வீட்டில் குர்ஷித என்ற போலீஸ்காரர் வாடகைக்கு இருந்தார். அவர் வாடகை தொகை தராததால் அய்யுப் அவரை வெளியேற்றினார். இதற்கு பழி வாங்குவதற்காக குர்ஷித் இன்னும் 3 காவலர்களுடன் சேர்ந்து அய்யூப் போதைப் பொருள் வைத்திருந்ததாக கூறி கைது செய்து சிறைக்கு அனுப்பியுள்ளனர்.
இதையும் வாசிக்க: ஆவின் நிறுவனத்தின் மூலம் குடிநீர் விற்பனை செய்வதா? அண்ணாமலை கண்டனம்
வழக்கு விசாரணையின்போது தடயவியல் சோதனை முடிவில் மோசடி செய்து, அய்யூப் வைத்திருந்தது ஹெராயின் என மாற்றியுள்ளனர். ஆனால் மேலதிக சோதனைக்காக லக்னோ லேபிற்கு கொண்டு சென்றபோது அங்கு அது ஹெராயின் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதன்பின்னர் டெல்லிக்கு இந்த பொருள் கொண்டு செல்லப்பட்டபோது, அங்கு மோசடி செய்து அது ஹெராயின் என்று குர்ஷித் நம்ப வைத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் முன்னுக்கு பின் முரணான ஆய்வு முடிவுகள் வந்ததை தொடர்ந்து லக்னோ லேபில் உள்ள பரிசோதனையாளர்களுக்கு சம்மன் அனுப்பி நீதிமன்றம் விசாரித்தது. அவர்கள் வழக்கு விசாரணையின்போது, எந்த கால நிலையிலும் ஹெராயினின் நிறம் வெள்ளையாக இருக்கும் நிறம் மாறாது. ஆனால் சோதனைக்கு வந்த பொருள் பழுப்பு நிறத்திற்கு மாறியதால் அது ஹெராயின் இல்லை என்று உறுதிபடுத்தினர். இதையடுத்து நீதிபதி விஜய் குமார் கதியார் குற்றம் சாட்டப்பட்டிருந்த அப்துல்லா அய்யூபை விடுவித்து உத்தரவிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Uttar pradesh