நாமக்கல் கமலாலய குளத்தில் கழிவு நீர் கலந்து குளம் நிரம்பி சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துஉள்ளனர்.
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் உள்ள மலைக்கோட்டையை சுற்றி கமலாலய குளம், ஜெட்டிகுளம், திருப்பாக்குளம் உள்ளிட்ட குளங்கள் அமைந்துள்ளன. நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறு கோவில்களில் நடக்கும் திருவிழாக்களின் போது, அந்த குளங்களிலிருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்துச்சென்று வழிபாடு செய்வர். அதேபோல், பலப்பட்டறை மாரியம்மன் கோவிலின், கம்பம் நடுதல் மற்றும் கம்பம் விடும் நிகழ்ச்சி, கமலாலய குளத்தில் நடக்கும்.
இராமாயண காலத்தில் சஞ்சீவிமூலிகையைப் பெறுவதற்கு இமயத்தில் இருந்து சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து வந்தார் ஆஞ்சநேயர் . பணி முடிந்ததும் மலையை அதே இடத்திலேயே வைத்துவிட்டு திரும்பினார். அவ்வாறு வருகையில் அங்கிருந்த ஒரு பெரிய சாளக்கிராமத்தை பெயர்த்து எடுத்துவந்தார். அந்த நேரத்தில் சூரியன் உதயமானதால் வான்வழியாக வந்து கொண்டிருந்த ஆஞ்சநேயர், தமது கையில் இருந்த சாளக்கிராமத்தை கீழே வைத்துவிட்டு கமலாலய குளத்தில் சந்தியாவந்தனத்தை முடித்தார். மீண்டு வந்து சாளக்கிராமத்தைக் தூக்க முயற்சித்தார். ஆனால் அதைத் தூக்க அவரால் முடியவில்லை. இராமனுக்குச் செய்ய வேண்டிய உதவிகளைச் செய்து முடித்துவிட்டு பிறகு வந்து என்னை எடுத்துச் செல்\" என்றொரு வான் ஒலி கேட்க ஆஞ்சநேயரும் சாளக்கிராமத்தை அங்கேயே விட்டு விட்டு கிளம்பினார். இராமன் போரில் வென்று சிதையை மீட்ட பிறகு ஆஞ்சநேயர் மீண்டும் இங்கே வருகிறார். ஆஞ்சநேயர் விட்டுப் போன சாளகிராமம் நாமமூர்த்தியாக வளர்ந்து நிற்க ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கியவாறு நின்று அருள் பாலித்து வருவதாக புராணத்தில் கூறப்படுகிறது.
இந்நிலையில், இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க கமலாலய குளத்தில் நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட மதுரை வீரன் கோவில் தெரு, பொய்யேரிக்கரை, ஜெட்டிகுளத்தெரு, கோட்டை காலனி உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர், வடிகால் வழியாக பூங்கா சாலை, பேருந்து நிலையம், மேட்டுத்தெரு, சேந்தமங்கலம் வழியாக சாக்கடையில் கலக்கிறது. தற்போது, பூங்கா சாலையில் உள்ள கமலாலய குளம் பகுதியில் செல்லும் சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் கலந்தது வருகிறது. அதனால், கோடைகாலத்திலும் கமலாலயகுளம் நீர் நிரம்பி காட்சியளிக்கிறது.
நிரம்பிய நீர் அருகே உள்ள, 'அம்மா' பூங்காவை முழுவதும் ஆக்கிரமித்துள்ளது. அதனால் அங்கு விளையாட வரும் குழந்தைகள் சாக்கடை நீரில் நின்று விளையாடும் சூழல் உள்ளது. அதேபோல், பூங்கா சாலையின் தரைமட்டத்தை தொட்டு நிரம்பிய நீரானது நேரு பூங்கா, பேருந்து நிலையம், செங்கழுனி விநாயகர் கோவில் வழியாக பிரதான சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். மேலும், துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, உடைந்த சாக்கடையை சீரமைத்து புனிதத்தன்மை வாய்ந்த கமலாலய குளத்தை புதுப்பிக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal, Temple