மத்திய அரசின் மாசுக்கட்டுப்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் ஒரு சட்ட திருத்தத்தை அறிவித்தது. அதில், 5 ஆயிரம் கோழிகளுக்கு அதிகமாக பண்ணைகளில் வளர்க்கும், கோழிப்பண்ணையாளர்கள் அனைவரும் கட்டாயம் மாசு கட்டுப்பாட்டு துறையின் கீழ் பதிவு செய்து, தடையில்லாச் சான்று பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோழி பண்ணை அமைந்துள்ள அறையின் தரை களிமண் இருந்தால் அதை அகற்றிவிட்டு, கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும். அப்போதுதான் கோழிகளின் எச்சம் தரையில் விழுந்து பூமிக்குள் செல்லாமல் தடுக்கப்படும் என தெரிவித்திருந்தது.
நாமக்கல் மண்டலத்தில், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 1000க்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் சுமார் 6 கோடி முட்டை இனக் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. நாமக்கல் மண்டலத்தில் உள்ள பண்ணைகளின் தளத்தில் செம்மன் மற்றும் கிராவல் மண் கொண்டு தரை அமைப்பது வழக்கம்.பெரும்பாலான பண்ணைகள் இந்த அடிப்படையில்தான் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு முறையும் புதிய கோழிக்குஞ்சுகள் விடும்போது பண்ணைகளை முழுமையாக சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிப்பதாலும், உயிரி பாதுகாப்பு முறைகள் கடைபிடிக்க படுவதாலும், இப்பகுதியில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் இடும்எச்சம் பூமியை மாசு படுவதில்லை. இதை விவசாயிகள் வாங்கிச் சென்று தங்கள் தோட்டப் பயிர்களுக்கு உயிர் உரமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய அறிவிப்பால், நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகள் தடையில்லா சான்று பெறுவதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதையொட்டி பண்ணையாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த, நாமக்கல் லோக்சபா எம்.பி டெல்லியில் உள்ள மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் இது குறித்து ஆலோசனை நடத்தினார்.
மேலும் நாமக்கல் பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சுகாதாரமான முறையில் பண்ணைகள் அமைத்து கோழிகள் வளர்ப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் விளக்கினார். இதை ஏற்றுக்கொண்ட மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில் கோழிப்பண்ணைகளில் கான்கிரீட் தரை தளத்திற்கு பதிலாக செம்மண் மற்றும் கிராவல் மண் தரை அமைத்துள்ள பண்ணைகளையும் ஆய்வு செய்து, அந்த பண்ணைகளுக்கு தடையில்லா சான்று வழங்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
இதையொட்டி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் இந்த நடைமுறையை பின்பற்றி சான்று வழங்கலாம் என்று சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. சங்க தலைவர் சிங்கராஜ் தலைமை வகித்தார். செயலாளர் சுந்தரராஜ், பொருளாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
கூட்டத்தில் கோழிப்பண்ணைகளுக்கான, மாசுகட்டுப்பாட்டு வாரிய சான்றிதழ் பெற வேண்டிய பிரச்சினையில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி, சமூக தீர்வு கண்ட நாமக்கல் லோக்சலா எம்.பி சின்ராஜூக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal