தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில், நகர்ப்புற உள்ளாட்சித்துறையின், மானியக் கோரிக்கையின்போது பேசிய, அமைச்சர் நேரு, தமிழகத்தில் உள்ள நாமக்கல், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, காரைக்குடி உள்ளிட்ட நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து, பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். நாமக்கல்லை மாநகராட்சியாக்க வேண்டும் என்ற நாமக்கல் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற இருப்பதாக, இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் நகராட்சி, 1970ம் ஆண்டு முன்பு வரை, டவுன் பஞ்சாயத்தாக இருந்தது. அதையடுத்து, 1970ம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயரத்தப்பட்டது. பின்னர், மக்கள் தொகை அடிப்படையில், 1988 ல், தேர்வு நிலை நிகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது, முதல், நகராட்சி மொத்தம் 10.24 சதுர கி.மீ., பரப்புளவுடன், 30 வார்டுகளைக் கொண்டுசெயல்பட்டு வந்தது. 2011ல், அய்யம்பாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, பெரியப்பட்டி, காவேட்டிப்பட்டி, தும்மங்குறிச்சி, கொசவம்பட்டி, காவேட்டிப்பட்டி, முதலைப்பட்டி, சின்ன முதலைப்பட்டி, உள்ளிட்ட, 9 பஞ்சாயத்துக்கள் நகராட்சியுடன் இணைக்கப்பட்டன.
அதன் காரணமாக, நகராட்சியின் மொத்த பரப்பரளவு 55.24 சதுர கி.மீ. ஆக அதிகரித்து. தற்போது 39 வார்டுகளுடன் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில், சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதையடுத்து, 2022, பிப்ரவரி2ஆம் தேதி நாமக்கல் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
இதையும் படிங்க : நாமக்கல்லில் லாரிகள் நிறுத்துவதற்கு பார்க்கிங் யார்டு.. நடவடிக்கை எடுக்க கோரிக்கை..
இந்நிலையில், கடந்த, பிப்ரவரி 14ஆம் தேதி, நடைபெற்ற நகராட்சி கவுன்சில் கூட்டத்தில், மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என, தமிழக அரைசை கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், தற்போது, நாமக்கல் நகராட்சியில், 39 வார்டுகள் உள்ளன. அவற்றில், 1.50 லட்சம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். நாமக்கல் நகராட்சியின் சொந்த ஆண்டு வருமானம் ரூ. 25.64 கோடி. மேலும், இதர வருமானங்கள் ரூ. 19.51 கோடி சேர்த்து, மொத்த ஆண்டு வருமானம் ரூ. 45.15 கோடி ஈட்டப்படுகிறது.
அதனால், நாமக்கல் நகராட்சி, தற்போதைய பரப்பளவு மற்றும் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில், மாநகராட்சியாக தரம் உயர்த்தும் நிலையில் உள்ளது. நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்துவதால், மத்திய-மாநில அரசுகள் அறிவிக்கும் திட்டங்களின் கீழ், சாலைகள், குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை, மழைநீர் கால்வாய், திடக்கழிவு மேலாண் பற்றும் இதர கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வாய்ப்புள்ளது. தற்போதுள்ள நகரின் பரப்பளவு, ஆண்டு வருமானத்தின் அடிப்படையிலும், நாமக்கல் மாவட்டத்தின் தலை நகரத்தில் அமைந்துள்ள, நாமக்கல் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
மேலும், நகரைச் சுற்றி அமைக்கப்படும் ரிங் ரோடு பகுதியில் உள்ள வகுரம்பட்டி, வள்ளிபுரம், ரெட்டிப்பட்டி, வீசானம், மரூர்ர்பட்டி, பாப்பிநாயக்கன்பட்டி, சிலுவம்பட்டி, தொட்டிப்பட்டி, வசந்தபுரம், வேட்டாம்பாடி, லத்துவாடி, காதப்பள்ளி ஆகிய 12 கிராம பஞ்சாயத்துக்களை, தரம் உயர்த்தப்பட்ட நாமக்கல் மாநகராட்சியுடன் இணக்கலாம். அவ்வாறு தரம் உயர்த்தினால், தற்போது இருக்கின்ற, 39 வார்டுகளுடன் மாநகராட்சியாக தொடரும். இரண்டு ஆண்டுகளுக்கு பின், உள்ளாட்சி பதவிகள் முடிந்து, மீண்டும் தேர்தல் நடக்கும்போது 12 கிராம பஞ்சாயத்துக்களையும் இணைத்து வார்டு எண்ணிக்கையை அதிகப்படுத்தி, விரிவுபடுத்தப்பட்ட நாமக்கல் மாநகராட்சியாக அறிவிக்கலாம் என அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த தீர்மானத்தை நாமக்கல் ராஜ்யசபா எம்.பி. ரஜேஷ்குமார், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் உள்ளிட்டோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் கவனத்திற்கு எடுத்துச்சென்று, நாமக்கல்லை மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையொட்டி தமிழக சட்டசபையில் நடைபெற்ற மானிய கோரிக்கையில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, நாமக்கல்லை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal