சமுதாயத்தின் வளர்ச்சிக்கு ஏற்றார் போல் புதிய புதிய கண்டுபிடிப்புகளும், கருவிகளும் வந்த வண்ணம் இருக்கின்றன.
நவீன தொழில் கருவிகளுடன் உதயமான இந்த நவீன காலம், புதிய புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் கருவிகளால் வாழ்க்கையின் பல்வேறு வேலை சுமைகளை எளிமையாக்கியுள்ளது. மேலும், பொருட்களின் உற்பத்தியை பன்மடங்கு பெருக்கி அளப்பரிய வகையில் பொருட்களை உற்பத்தி செய்து, மலைபோல் குவித்து வருகிறது.
இந்நிலையில், கல்லுாரி மாணவர்கள் இறுதி ஆண்டு படிப்பின் போது ‘Project’ தயாரிப்பது வழக்கம். இந்த புராஜெக்ட்டானது, தொழில் சார்ந்த வளர்ச்சியை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும். அந்த வகையில், தொழிற்சார்ந்த புராஜெக்ட்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு ரூ.15 லட்சம் வரை மத்திய அரசு நிதி வழங்குகிறது.
இது போன்ற புதிய தொழில் திட்டங்களை மாணவர்கள் மட்டும் அன்றி தொழில் முனைவோரும் தயாரித்து கொடுக்கலாம். அதன்படி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அங்கீகரிக்கும் கல்லுாரிகள் மூலம் வரும் மாணவர், தொழில் முனைவோருக்கு மட்டுமே இந்த நிதி வழங்கப்படுகிறது.
ALSO READ | மதுரை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம் - இந்த ரயில்களை பயன்படுத்துங்கள்.!
இந்நிலையில், மத்திய அரசால் அங்கீகரிக்கப்படும் ஒரு கல்வி நிறுவனம் அதிகபட்சம் 10 ‘புராஜெக்ட்’ களை தாக்கல் செய்து நிதியைப் பெறலாம். மேலும் சிறு, குறு, நடுத்தர நிறுவனம், தேர்வு செய்துள்ள கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள மாணவர், தொழில் முனைவோருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
இந்த ஆராய்ச்சிக்காக அங்கீகரிக்கப்பட்ட கல்லுாரிக்கு 1 கோடி ரூபாய் வரை நிதி வழங்கப்படும். இதில் தளவாட சாமான்கள், புதிய தொழில்நுட்பத்திற்கு தேவையான இயந்திரங்கள் வாங்க பயன்படுத்தலாம். அதே போன்று மாணவர், தொழில் முனைவோர் உற்பத்தி தொழிலில் புதுமை மற்றும் புதிய டிசைன்களை உருவாக்கினால் அதற்கு ரூ.40 லட்சம் வரை நிதி வழங்கப்படும். புதிய தொழில் நுட்ப வடிவமைப்பிற்கான தொகை 3 கட்டமாக பிரித்து தரப்படும்.
புதிதாக கண்டுபிடிக்கப்படும் தொழில்நுட்பம் மற்றும் பொருட்களுக்கு வெளிநாடுகளில் தனியாக காப்புரிமை பெறுகின்றனர். அதே போன்று நம் நாட்டிலும் தொழில் முனைவோர் புதிதாக கண்டறியும் உற்பத்தி பொருளுக்கு காப்புரிமை, புவிசார் குறியீடு பெறலாம். அந்த வகையில் உள்நாட்டு காப்புரிமைக்கான செலவு தொகையில் அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாயை மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர நிறுவனத்திடம் பெறலாம். அதே போன்று வெளிநாட்டில் காப்புரிமை பெற்றால் அதற்கு 5 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும்.
சிறு, குறுந்தொழில் உரிமையாளர்கள், ஒரு தொழில் முனைவோர் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருளுக்கான ‘டிரேட் மார்க்’ களை அரசிடம் பதிவு செய்ய வேண்டும். இது போன்று பதிவு செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட செலவில் ரூ.10,000 வரை மத்திய அரசு நிறுவனம் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கும். இது போன்று மத்திய அரசின் சிறு, குறு,நடுத்தர நிறுவனம் நாட்டில் புதிய உற்பத்தி தொழிற்சாலைகளை உருவாக்க தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தி வருகிறது.
இது குறித்து மதுரையில், மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன உதவி இயக்குனர் உமா சந்திரிகா கூறுகையில், மத்திய அரசின் இந்நிறுவனம் மதுரையை மையமாக வைத்து மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி செயல்படுகிறது.
புதிய தொழில்நுட்பம் சார்ந்த நிதியை பெற கல்லுாரி மாணவர், தொழில் முனைவோர் மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர நிறுவன அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆலோசனைக்கு 9842035441 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு, நாட்டில் தொழில் முனைவோர்களை உருவாக்கி தொழிலை வளர்த்து உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனத்திற்கென தனியாக அமைச்சரவையை உருவாக்கியுள்ளது. இந்த நிறுவனங்கள் மூலம் நாட்டில் தொழில் முனைவோருக்கு நிதி உதவிகளை வழங்கி தொழில் வளர்ச்சியை அதிகரித்து தொழில்புரட்சி ஏற்படுத்தும் நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central government, Central govt, College student, Madurai