மதுரையில் மனைவிக்கு தொந்தரவு கொடுத்த சினிமா உதவி ஒளிப்பதிவாளர் கொலை செய்து புதைக்கப்பட்ட வழக்கில் கணவன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் சரவணமருது (32). திருமணம் ஆகாத நிலையில், மும்பையில் சினிமா உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார். இவர், சில ஆண்டுகளுக்கு முன்னர் மேலூர் அருகே திருவாதவூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகள் மாலதியுடன் பழகி வந்தார். எனினும் மாலதிக்கும் சிவகங்கை மாவட்டம் கட்டாணிப்பட்டியை சேர்ந்த லாரி ஓட்டுனர் சக்திவேல் என்பவருக்கும் திருமணம் நடந்து தற்போது ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
சமீபத்தில் மதுரை வந்திருந்த சரவணமருது கடந்த மார்ச் 14ம் தேதியன்று தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே சென்றுள்ளார். அன்றிரவு அவர் வீட்டிற்கு திரும்பாததால், அவரது சகோதரி ராஜேஸ்வரி ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை தேடிவந்துள்ளனர்.
சரவண மருதுவின் அலைபேசி கடைசியாக திருவாதவூர் பகுதியில் அணைக்கப்பட்டதாக போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து, அப்பகுதியில் சோதனை செய்த போது அங்கிருந்த குவாரி பள்ளத்தில் அவரது இருசக்கர வாகனம் கிடந்ததை கண்டறிந்து விசாரணையை தீவிரப்படுத்தினர். சரவணமருதுவின் அலைபேசி எண்ணுக்கு கடைசியாக மாலதியின் எண்ணிலிருந்து குறுஞ்செய்தி வந்தததால், மாலதியின் கணவர் சக்திவேலை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், மாலதிக்கு திருமணம் ஆன பின்னரும் சரவணமருது தொடர்ந்து பழக முயற்சித்து வந்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், மாலதியின் எண்ணிலிருந்து சரவணமருதுவுக்கு குறுஞ்செய்தி அனுப்பி திருவாதவூர் அருகே ஆளில்லாத பகுதிக்கு வரவழைத்து மாமனார் மற்றும் மைத்துனர் ஆகியோருடன் இணைந்து அடித்துக் கொலை செய்து, அவரது உடலை கண்மாய் அருகே புதைத்து சென்றதும் தெரிய வந்தது.
இதனையடுத்து, சக்திவேல் (36), அவரது மாமனார் முருகன் (56), மைத்துனர் ராஜபிரபு (31) ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார், திருவாதவூர் கீரனூர் கண்மாய் பகுதியில் சரவணமருதுவின் உடலை தோண்டி எடுத்து உடற்கூராய்வு செய்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Madurai, Murder