பரமக்குடியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் வைகை ஆற்றில் இருந்து ஒரு சட்டி மணல் கூட வெளியே அள்ளி செல்லக் கூடாது என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரமக்குடி ஆர்.டி.ஓ முருகன் உத்தரவிட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பொட்டிதட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவாத், பரமக்குடி எம்.எல்.ஏ முருகேசன், போகலூர் யூனியன் சேர்மன் சத்யா குணசேகரன், பரமக்குடி தாசில்தார் தமீம் ராஜா, பொட்டிதட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் வருவாய் துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை துறை என ஐந்து துறைகளில் 97 பயனாளிகளுக்கு ரூபாய் 6 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அப்போது அக்கிரமேசி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வைகையாற்றில் அதிக அளவில் மணல் திருட்டு நடைபெறுவதாக ஆர்டிஓ முருகனிடம் மனு அளித்தனர்.இதையடுத்து, வைகை ஆற்றில் இருந்து ஒரு சட்டி மணல் கூட வெளியே செல்லக் கூடாது, அதற்கு ஏற்றாற்போல் அதிகாரிகள் பணிபுரிய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.