உத்தர பிரதேசத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான அதிக் அகமதுவும் அவரது சகோதரரும் நேற்றிரவு காவல்துறை கண்ணெதிரே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, 75 மாவட்டங்களிலும் 144 தடை சட்டம் போடப்பட்டுளளது. மேலும், இந்த படுகொலையை விசாரிக்க 3 நீதிபதிகள் அடங்கிய குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏவான ராஜூ பால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அகத் அகமது முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், ராஜூ பால் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்து வந்த உமேஷ் பால் என்பவர் 2023 பிப்ரவரி 24ம் தேதி அதிக் அகமது ஆட்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த கொலை வழக்கில், அதிக் அகமது, அவரின் மனைவி, இரண்டு மகன்கள், சகோதரர் ஆஷரப் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் அர்பாஸ் மற்றும் உஸ்மான் என்ற அகமதுவின் கூட்டாளிகள் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தனித்தனியே கொல்லப்பட்டனர்.
2017ல் நடைபெற்ற மற்றொரு தாக்குதல் வழக்கில் சிறையில் இருந்து அகமது, கடந்த மார்ச் 27 அன்று, பிரயாக்ராஜில் உள்ள நைனி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அடுத்த நாள், உமேஷ் பால் கடத்தப்பட்ட வழக்கில் அவருக்கு MP/MLA க்கான சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
இதையும் வாசிக்க: 11,684 கோடியில் சொத்துகள், 160 வழக்குகள், ஐஎஸ்ஐ தொடர்பு: அஷ்ரப், ஆதிக் அகமதுவின் குற்ற அறிக்கை விபரம்!
ஏப்ரல் 12ஆம் தேதி அமலாக்க இயக்குனரகம் அகமதுவின் உதவியாளர்களுடன் தொடர்புடைய 15 இடங்களில் சோதனை நடத்தி ரூ.100 கோடிக்கு மேல் பினாமி சொத்துகளைக் கண்டறிந்தது.(ஏப்ரல் 13)அடுத்த நாள், அகமதுவின் மகன் ஆசாத் அஹமதுவும், அவருடன் இருந்த குலாம் முகமதுவும் உத்தரபிரதேச காவல்துறையின் சிறப்புப் படைப் பிரிவால் ஜான்சி நகரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அடுத்த நாள், அகமது மற்றும் அஷ்ரஃப் ஆகியோரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலுக்கு பிரயாக்ராஜ் நீதிமன்றம் அனுப்பியது. மேலும், உமேஷ் பால் கொலை வழக்கு தொடர்பாக ஐந்து நாள் போலீஸ் காவலில் வைக்க அனுமதித்தது.
இந்நிலையில், நேற்று இரவு, அதிக் அகமதுவும், அவரது சகோதரும் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்படும்போது காவல்துறையின் கண்ணெதிரேலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த கொலை வழக்கில் 3 பேர் சரணடைந்துள்ளனர். சமூகத்தில் பிரபலம் அடைய இந்த படுகொலையை செய்தாகவும், இந்த செயலின் மூலம் தங்களுக்கு எதிர்கால நன்மைகள் கிடைக்கும் என்றும் கொலையாளிகள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கொலையான அதிக் அகமது மீது 44 ஆண்டுகளுக்கு முன்பே குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி உமேஷ் பால் கொல்லப்பட்ட பிறகு தான் அவருக்கு எதிரான சமரசம் அற்ற மிகத் தீவிரமான நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. உமேஷ் பால் கொல்லப்பட்ட 50 நாட்களுக்குள் அதிக் அகமதுவின் ஒட்டுமொத்த சாம்ராஜ்யம் சரிந்து விட்டதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதேசமயம், உத்தர பிரதேச மாநிலத்தில் ஜனநாயக விழுமியங்கள், அடிப்படை சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி முற்றிலும் சீர்குலைந்து விட்டதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் ட்விட்டர் பதிவில், ‘காவல்துறை மற்றும் ஊடங்கள் கண்ணெதிரே, குற்றவாளிகள் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வது வெட்கக் கேடானது. அரசியலமைப்பு ஜனநாயகத்தில் இத்தகையை குற்றச் செயல்களுக்கு இடமில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் 75 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Uttar pradesh