இந்தியாவிற்குள் சுற்றுலா செல்ல வேண்டும் என்றால் அதற்கான இடங்கள் எக்கச்சக்கமாக உள்ளது. அதை எல்லாம் எப்படி அடைவது சரியான பயண திட்டத்தை எப்படி போடுவது? தங்குமிடம், பயணம் என்று எல்லாவற்றையும் பார்க்கவேண்டும். புதிதாக போகும் இடத்தில் இதை எல்லாம் எப்படி கண்டுபிடிப்பது என்று கஷ்டப்படுபவர்களுக்காகவே ஐஆர்சிடிசி பல்வேறு பேக்கேஜ்களை அடிக்கடி அறிமுகப்படுத்துகிறது.
இந்திய ரயில்வே துறையின் கிளை நிறுவனமான IRCTC நிறுவனம் இந்தியா முழுக்க சுற்றி பார்க்க விரும்பும் மக்களுக்கு ஏற்ப மலிவு விலையில் பல சுற்றுலா பயண திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்தியா மட்டும் அல்லாது நேபாளம், இலங்கை, வங்கதேசம் வரை ரயில் மற்றும் விமானத்தின் மூலம் சென்று வரும் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் பக்தி சுற்றுலா பேக்கேஜ் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
சிவ பக்தர்களுக்கான தனித்துவமான புனித ஜோதிர்லிங்க யாத்திரை தான் அது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள 12 ஜோதிர்லிங்கங்களை தரிசனம் செய்வதற்காக தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் பயணம் செய்து, தரிசித்து வருகின்றனர். நீங்களும் இந்த ஜோதிர்லிங்கங்களை தரிசிக்க விரும்பினால், இந்திய ரயில்வே உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.
12 ஜோதிலிங்க ஸ்தலங்களில் 5 ஜோதிர்லிங்க இடங்களை தரிசிப்பதற்காக ஒரு சிறப்பு டூர் பேக்கேஜை அறிவித்துள்ளது. இந்த மதச் சுற்றுலா மே 20 தொடங்கி மே 31 முடிவடையும்.இந்த சிறப்பு சுற்றுலாவிற்கு செல்லும் பயணிகள் இந்து மதம் சார்ந்த பேக்கேஜ்ஜிற்காக பயன்படுத்தப்படும் பாரத் கவுரவ் சுற்றுலா ரயிலில் செல்வார்கள். இந்தச் சுற்றுலாவில் எந்தெந்த ஜோதிர்லிங்கத்தை பக்தர்கள் தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதையும், பயணத்தின் போது என்னென்ன வசதிகள் இருக்கும் என்பதையும் உங்களுக்கு இப்போது சொல்ல இருக்கிறோம்.
IRCTC இன் இந்த டூர் பேக்கேஜில் 5 ஜோதிர்லிங்கங்களான மஹாகாலேஷ்வர், ஓம்காரேஷ்வர், நாகேஷ்வர், திரிம்பகேஷ்வர் மற்றும் சோம்நாத் கோவில்களுக்கான பயணம் அடங்கும். இது தவிர, பயணிகள் மற்ற மத மற்றும் வரலாற்று இடங்களுக்குச் செல்லவும் வாய்ப்பு கிடைக்கும். குஜராத்தில் அமைந்துள்ள ஒற்றுமைக்கான சிலை, துவாரகதீஷ் கோயில், ஷீரடி சாய்பாபா மற்றும் ஷனி சிங்கனாபூர் ஆகிய இடங்களையும் இந்த பேக்கேஜில் பார்வையிட முடியும்.
இந்த மதப் பயணம் மே 20 ஆம் தேதி கொல்கத்தா ரயில் நிலையத்தில் தொடங்கி மே 31 ஆம் தேதி முடிவடையும். அதாவது, இந்த சுற்றுப்பயணம் 12 நாட்கள் மற்றும் 11 இரவுகள் நீடிக்கும். இந்த டூர் பேக்கேஜில் ரயில் கட்டணம், தேநீர், தண்ணீர், காலை-மாலை- இரவு உணவு ஆகியவை அடங்கும். யாத்திரையின் போது பக்தர்களின் வசதிக்காக உதவியாளர்கள் இருப்பார்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் முழு யாத்திரையையும் நடத்துவார்கள். இந்தப் பயணத்தில் ஒவ்வொரு பயணிக்கும் பயணக் காப்பீடு வழங்கப்படும்.
IRCTCயின் பாரத் கௌரவ் டூரிஸ்ட் ரயிலில் 3 வெவ்வேறு வகைகளில் முன்பதிவு மற்றும் கட்டணம் உள்ளது. ஸ்லீப்பர், ஏசி III டயர் மற்றும் ஏசி II டயர் என 3 வெவ்வேறு வகைகளில் முன்பதிவு செய்யலாம். பல்வேறு நகரங்களில் தங்குவதற்கு ஏசி ஹோட்டல்களில் அறைகள் ஏற்பாடு செய்யப்படும். இந்த ரயிலில் எகானமி வகுப்பில் (ஸ்லீப்பர் கிளாஸ்) ஒருவருக்கு கட்டணம் ரூ.20,060. இந்த பேக்கேஜில் பயணிகள் தங்குவதற்கு ஏசி இல்லாத பட்ஜெட் ஹோட்டல் மற்றும் ஏசி அல்லாத பேருந்து வசதியும் செய்து தரப்படும்.
ஸ்டாண்டர்ட் பேக்கேஜ்ஜின் படி, 3வது டயர் ஏசி கோச்சில் பயணம் செய்ய, ஒரு நபருக்கான கட்டணம் ரூ.31,800 மற்றும் கம்ஃபோர்ட் டயர் 2வது டயர் ஏசி கோச்சில் பயணம் செய்ய, ரூ.41,600 செலுத்த வேண்டும். இந்த இரண்டு பேக்கேஜ்களிலும், பயணிகள் ஏசி ஹோட்டலில் தங்குவதற்கான வசதியைப் பெறுவார்கள்.
பாரத் கௌரவ் ரயில் திட்டத்தின் கீழ் இரயில் சுற்றுலாவை மேம்படுத்த இந்திய இரயில்வே சுமார் 33% சலுகையை வழங்குகிறது. இந்தச் சலுகை இந்த சுற்றுலாத் தொகுப்பிற்கும் பொருந்தும். இந்த சுற்றுப்பயணத்திற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது. முன்பதிவு மற்றும் பிற தகவல்களுக்கு IRCTC. www.irctctourism.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.