ஸ்ரீதேவி தன்னுடைய தாயுடன் அன்று காலையிலேயே வந்து காத்திருந்தார். அவர் தன் முதல் கர்ப்பத்தில் இருக்கிறார் . இப்போது நான்கு மாதங்கள் ஆகிறது.
ஸ்ரீதேவி முகத்தில் சிறிது பதட்டமும் பயமும் காணப்பட்டது. என்னை பார்த்ததும்," டாக்டர் !திடீரென்று தொப்புளை சுற்றி வலிக்கிறது. நேற்று மாலையிலிருந்து ஆரம்பித்தது. சில நேரங்களில் மிக அதிகமாக இருக்கிறது. சில நேரங்களில் குறைவாக இருக்கிறது. அதிகமாக இருக்கும்போது தாங்கவே முடியவில்லை. ஓய்வெடுத்தால், சிறிது நேரத்திற்கு பிறகு வலி தானாகவே படிப்படியாக குறைய ஆரம்பிக்கிறது. எங்கிருந்து இந்த வலி வருகிறது? பாப்பாவிடம் இருந்தா? இல்லை வேறு ஏதாவது பிரச்சனையா? பயமாக இருக்கிறது டாக்டர் ! "என்றார்.
நேற்று என்ன உணவு எடுத்துக் கொண்டீர்கள் என்று கேட்டேன் .
"மதியம் வீட்டு உணவு தான். இரவு மட்டும் வெளியில் இருந்து பிரியாணி சாப்பிட்டேன். அது கூட மிகவும் சிறிய அளவே எடுத்துக் கொண்டேன் . காலையில் நன்றாக பசித்தது. இரண்டு இட்லி சாப்பிட்டேன்" என்று கூறினார்.
"வலி தவிர வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருக்கிறதா? " என்று கேட்டேன். வேறு எந்த பிரச்சனையும் இல்லை" என்றார்.
"சரி வாருங்கள் ஸ்ரீதேவி!, செக் செய்யலாம் என்று கூறினேன். ஸ்கேனில் குழந்தையின் இருதயத் துடிப்பை பரிசோதித்து பார்த்தேன். நன்றாக இருந்தது. அசைவும் நன்றாக இருந்தது.
"பயப்பட எதுவும் இல்லை " என்று தைரியம் கூறினேன்.
நான்காவது மாதத்தில் தொப்புள் வலிக்கான காரணங்கள் என்னென்ன இருக்கலாம்?
கர்ப்பத்தின் தொடக்கத்தில் குழந்தையோடு இருக்கக்கூடிய கருப்பை அடி வயிற்றின் அடியில் இருக்கும். மூன்று மாதத்திலிருந்து மெதுவாக மேல் எழும்பி வயிற்றுப் பகுதிக்குள் வரத்துவங்கும். நான்காவது மாதத்தில் மேலே வர வர தொப்புளை சுற்றி உள்ள தோல் மற்றும் சதையும் விரிவடைய ஆரம்பிக்கிறது. மேலும் ரெக்டஸ்( rectus) எனப்படும் தசைப் பகுதி விரிவடைவதால் நடுவே தொப்புளுக்கு அருகில் உள்ள தோல் பகுதிகள் வலி உணர்வை அதிகமாக உணர்கின்றன .
மேலும் கருப்பை வளர வளர உள்ளே உள்ள உறுப்புகள் இடம் மாற்றப்பட்டு நகர்த்தப்படுகின்றன. அதனால் தொப்புளை சுற்றி உள்ள பகுதியில் வலி ஏற்படலாம் . தொப்புளில் வளையங்கள் அணியும் போது அந்த பகுதியில் ஏதேனும் புண் ஏற்பட்டு அதனாலும் வலி ஏற்படலாம்.
ஒரு சிலருக்கு ஹெர்னியா எனப்படும் குடலிறக்கம் தொப்புள் பகுதியில் ஏற்பட்டிருந்தால் அதுவும் கர்ப்ப காலத்தில் வலியை உண்டாக்கலாம்.
இவை பொதுவான காரணங்கள். அதனால் கர்ப்ப காலத்தில் தொப்புள் பகுதியை சுற்றி வலி ஏற்பட்டால் மருத்துவரிடம் பரிசோதித்து கொள்வது நல்லது .பொதுவான கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய சிக்கல் என்பதால் பயப்பட தேவையில்லை.
Also Read | பெண்குயின் கார்னர் 77 | கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதத்தில் ரத்த கசிவு ஏற்பட காரணம் என்ன..?
"ஸ்ரீதேவியும் அவருடைய தாயாரும் மிகவும் நன்றாக விளக்கி கூறினீர்கள் டாக்டர்! தொலைவில் இருந்து வந்தாலும் இங்கேயே பார்க்க வேண்டும் என்று ஸ்ரீதேவி கூறிவிட்டாள். உங்கள் மேல் அவளுக்கு அபரிமிதமான நம்பிக்கை" என்றார் ஸ்ரீதேவியின் தாயார். "உங்களுடைய அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி" என்றேன்.
திருப்தியுடன் இருவரும் விடைபெற்றனர்.
கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pregnancy care, Pregnancy changes, Pregnancy Risks, பெண்குயின் கார்னர்