நமக்கு அனைத்து உறுப்புகளும் முக்கியம் என்றாலும் மூளை மிகவும் முக்கியமானது என்று சொல்லலாம். ஏனெனில், அதுவே நம் அனைத்து உறுப்புகளையும் அதன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
காவேரி மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை ஆலோசகர் மற்றும் மருத்துவர் கிருஷ்ண சைதன்யா அவர்கள் தலையில் அடிபடுவது குறித்து பேசுகையில் பின்வரும் சில உண்மை சம்பவங்களை கோடிட்டு காட்டி, தலையில் அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

இருபது வயதான ஒரு இளைஞன், தனது புதிய பைக்கில், எதிர்பாராத விதமாக வேறொரு வாகனம் மீது மோதி விடுகிறார். இதனால் மூளைக் காயம் ஏற்பட்டு, விரைவாக ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டார். தாமதமாகியிருந்தால் கண்டிப்பாக நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும். அவரது மூளையில் கடுமையான சேதம் ஆகி இருந்தது. 6 நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகும், பல அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகும் கூட, அவர் இன்னும் படுத்த படுக்கையாக இருக்கிறார் என்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அவரால், பேசவோ, நடக்கவோ அல்லது சிந்திக்கவோ முடியாது. தற்போது முழுக்க முழுக்க குடும்பத்தைச் சார்ந்தே அவர் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது.
வெறும் 5 வயதே ஆன பிஞ்சு குழந்தையின் வாழ்க்கை தலையில் அடிபட்டதை தொடர்ந்து தலைகீழாக மாறிவிட்டது. அந்தக் குழந்தை பால்கனியில் விளையாடிக் கொண்டிருக்கும் போது தவறி மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து தலையில் பெரும் அடிப்பட்டது. உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமையே இதற்கான முக்கிய காரணமாகும்.
ஒரு பிரபலமான இருதயநோய் நிபுணர் தன் பணியை செவ்வனே முடித்து சோர்வாக காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சீக்கிரம் செல்ல வேண்டும் என்று சற்று வேகமாகத் தான் அவர் காரை இயக்கினார். ஆனால், எதிர்பாராத விதமாக சாலையில் உள்ள இடையூறை கவனிக்காமல், கார் கவிழ்ந்து விழுந்து தலையில் அடிப்பட்டு படுத்த படுக்கையில் இருக்கும் நிலை வந்துவிட்டது. இது அவருக்கு மட்டும் இழப்பல்ல, நம் நாட்டிற்கும் கூட!
ஒருவர் அவசர அவசரமாக தன் காரை பின்பக்கமாக இயக்கும் போது, அவருடைய குழந்தை காருக்கு நேராக விளையாடிக் கொண்டிருந்ததை கவனிக்க மறந்து காரை தன் குழந்தை மீதே ஏற்றிவிட்டார். அவர் அவசர அவசரமாக செயல்பட்டதால் குழந்தையின் நிலை கவலைக்குரியதாகிவிட்டது.
- ஒரு cab டிரைவர், போக்குவரத்து நெரிசல் இருக்கும் நேரத்தில் தன் மொபைலில் பிசியாகி விடுகிறார். இவருக்குப் பின் இருந்த ஒரு வயதான ஓட்டுநர், இதைக் கண்டு சற்று கடுப்பாகி, ஹாரன் அடிக்கத் தொடங்கினார். ஆனால், கேப் டிரைவருக்கும் ஹார்ன் சவுண்டு கேட்டு கடுப்பாகிவிட்டது. ஆத்திரத்தில் ஒரு கல்லை எடுத்து அந்த வயதான ஓட்டுநர் மீது எறிகிறார். அது அவர் தலையில் பட்டு தலையில் ஆபத்தான காயம் ஏற்படுவதற்கு காரணமாகி விடுகிறது. என்ன தான் இவை எதிர்பாராமல் நடந்தாலும், இதற்கு நம் கவனமின்மையும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. இவற்றை நம்மால் பின்வரும் ஒரு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமாக தவிர்க்க முடியும்.
நாம் சாலை விதிகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். நம்மைப் போன்று சாலையில் வண்டி ஓட்டும் சக ஓட்டுனர்களுக்கு இடையூறு இல்லமால் பார்த்து கவனமாக வண்டி ஓட்ட வேண்டும்.
வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால், அவர்கள் பால்கனி அல்லது மாடியில் விளையாடிக் கொண்டிருக்கும் போது கூடுதல் கவனம் செலுத்தி அவர்கள் அருகிலேயே இருக்க வேண்டும். ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கேட் அல்லது நெட் போட்டுக் கொள்ளலாம்.
வண்டி ஓட்டும் போது கண்டிப்பாக வேறு செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும், குறிப்பாக போன் பேசிக் கொண்டே ஒரு போதும் வண்டி ஓட்டாதீர்கள். ஒரு நொடியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை நினைவில் கொண்டு செயல்படவும். பதறிய காரியம் சிதறிப்போகும் என்பது இதற்கு மிகவும் பொருத்தும். பார்த்து நிதானமாக வண்டி ஓட்டுங்கள்.
மது அருந்தி இருந்தால் வண்டி ஓட்டுவதைத் தவிர்த்து விடுங்கள். இது உங்கள் உயிருக்கும் மட்டும் அல்ல, மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தாக மாறிவிடும்.நாம் எந்த அளவிற்கு கவனமாக இருக்கிறோமோ அந்த அளவிற்கு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் ஒரு அளவிற்கு தடுக்கலாம்.
அடுத்து நம் அரசாங்கமும் இது குறித்து சில நடவடிக்கைகள் எடுத்தால், கண்டிப்பாக நமக்கு பக்க பலமாக இருக்கும். ஆம், நம் அரசாங்கத்திற்கும் தலையில் ஏற்படும் காயங்களைத் தடுப்பதில் சமமான பொறுப்பு உள்ளது. நம் அரசாங்கம் சிறந்த தரத்திலான கட்டமைப்புகளை உருவாக்கி தருவதன் மூலம், தலையில் காயம் ஏற்படுவதை கண்டிப்பாக தவிர்க்க முடியும். உலகத் தலை காயம் குறித்த விழிப்புணர்வு தினம் அன்று, விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கோடு தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை அமைப்பதற்கு அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலைகள் அமைக்கும் போது தரமாக இருப்பதாக உறுதி செய்ய வேண்டும். அதே சமயம், எந்த குண்டும் குழியும் இல்லாமல் அடிக்கடி அவற்றை பராமரிக்க வேண்டும். மீண்டும் மீண்டும் சாலைகள் தோண்டப்படுவதைத் தவிர்க்க, துறைகளுக்கு இடையே சரியான ஒருங்கிணைப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சரியான திசை பலகைகளை உரிய இடங்களில் வைக்க வேண்டும். போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் கடுமையான போக்குவரத்து விதிகளை செயல்படுத்துதல் அவசியம். அகலமான மற்றும் எளிதில் அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையில் நடைபாதைகளை அமைத்துத் தர வேண்டும்.
ஒரு தனி நபருக்கு ஓட்டுநர் உரிமத்தை வழங்கும் போது கடுமையான உடல் மற்றும் மனநலப் பரிசோதனை மேற்கொள்ளப் பட வேண்டும். ஒருவர் மீண்டும் மீண்டும் போக்குவரத்து விதிகளை மீறினால் அவர்களின் உரிமத்தை ரத்து செய்தல் வேண்டும். தலையில் அடிபடுவது நம் மொத்த வாழ்க்கையையும் பாழாக்கி விடும் என்பதை நினைவில் கொண்டு முன்னெச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.