கரூர் மாவட்டம் கடவூர் அருகே கோயில் திருவிழாவின்போது பட்டியல் இன இளைஞரை கோயிலுக்குள் அனுமதிக்காததால் ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து தற்காலிகமாக கோயிலை இழுத்துப் பூட்டிய அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், கடவூர் அருகே வீரணம்பட்டியில் பெரும்பான்மையாக வாழும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அதே ஊரில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 80 குடும்பத்தினர் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர். இருவேறு சமூகங்கள் வசிக்கும் அப்பகுதியில் தொடர்ச்சியாக சாதி பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கிறது. மேலும் பெரும்பான்மையாக உள்ள சமூகத்தினர் பட்டியல் சமூகத்தினர் கோயிலுக்குள் நுழைவதை அனுமதிப்பதில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இங்குள்ள காளியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று அந்த கோயிலுக்குள் சென்ற ஒரு பட்டியலின இளைஞரை சட்டையை பிடித்து கோயிலுக்குள் வரக்கூடாது என்று அங்கிருந்த சிலர் வெளியே தள்ளியுள்ளனர். மேலும் சாமி கும்பிட்டு விட்டு திருநீர் கேட்டபோதும் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை அடுத்து இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, கடவூர் வட்டாட்சியர் முனிராஜ் தலைமையில் அதிகாரிகள் அமைதிப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, இந்த சம்பவம் காரணமாக காளியம்மன் கோவிலுக்கு அதிகாரிகள் தற்காலிகமாக பூட்டு போட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செய்தியாளர் : கார்த்திகேயன் - கரூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Karur, Local News