காஞ்சிபுரம் அருகே வளத்தோட்டம் பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் சில தினங்களுக்கு முன்னர் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 27 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். 18 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்த 9 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனை நடத்தி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து உயிரிழந்த குருவி மலை கிராமத்தைச் சேர்ந்த தேவி, சசிகலா, கோட்டீஸ்வரி, வளத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த விஜயா, கங்காதரன், காஞ்சிபுரம் தாயார் குளம் பகுதியைச் சார்ந்த பூபதி, சாமந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன், சங்குபாணி விநாயகர் கோவில் தெருவை சார்ந்த கௌதம், உள்ளிட்ட 8 பேரின் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கும் நிவாரண நிதி வழங்கப்பட்டது.
அதன்படி, உயிரிழந்தேரின் குடும்பத்தினரை நேரில் அழைத்து வந்து ஆறுதல் கூறி, தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து அறிவிக்கப்பட்ட தலா 3 லட்ச ரூபாய்க்கான நிவாரண உதவிக்கான காசோலையை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் உறவினர்களிடம் நேரில் வழங்கினார்கள்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சார்ந்தவர்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை எப்போது வேண்டுமானாலும் அரசிடமும், அரசாங்க அதிகாரிகளிடமும் கேட்டு பெறலாம் என ஆறுதல் கூறி அனுப்பி வைத்தனர். இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் புண்ணியகோட்டி, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News