சென்னையில் நடிகையின் கணவன், மகளை மகனே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு ராகவேந்திரா தெருவை சேர்ந்த செல்வராஜ் இசைப்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.இவரது மனைவி சாந்தி சினிமாவில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.ராஜா ராணி சீரியல் தொடரிலும் சாந்தி நடித்து இருக்கிறார்.செல்வராஜ் - சாந்தி தம்பதிக்கு ராஜேஷ் பிராங்கோ, பிரியா, பிரகாஷ் என்ற 3 பிள்ளைகள் உள்ளனர்.
முதல் இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணமாகி தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், கடைசி மகன் பிரகாஷ் மட்டும் பெற்றோருடன் வசித்து வந்தார்.மகள் பிரியா தனது பெற்றோரின் வீட்டருகிலேயே கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.கடைசி மகன் பிரகாஷ் சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாக பணி புரிந்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் சனிக்கிழமை காலை பிரியாவின் வீட்டிற்கு சென்ற பிரகாஷ் அங்கு தனது அக்காவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பிரகாஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரியாவின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் பிரியா மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
இதனை கண்டதும் அவரது வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து சத்தம் போட்டதையடுத்து பிரகாஷ் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.அவரது தாய் மற்றும் அண்ணனுக்கு தகவல் தெரிவித்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கதறி அழுதனர். தந்தையை காணவில்லையே என வீட்டிற்கு சென்று பார்த்தபோது செல்வராஜ் படுக்கையறையில் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த தந்தையை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு, அதே கத்தியுடன் சென்று அக்காவையும் பிரகாஷ் கொலை செய்திருப்பது தெரிந்தது. மாங்காடு போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: தேவிக்குளம் மார்க்சிஸ்ட் எம்எல்ஏ வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
அதே பகுதியில் சுற்றி திரிந்த பிரகாசை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.விசாரணையில் பிரகாஷ் குறித்த பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் போலீசாருக்கு தெரியவந்தன.சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பணிபுரிந்து வந்த பிரகாஷ் கஞ்சா மற்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொண்டதாகவும் அருகே இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தனியார் மருத்துவமனையில் பிரகாஷ்க்கு சிகிச்சை அளித்து வந்ததும், அதிக பணம் செலவானதால் அங்கிருந்து டிஸ்சார்த்ஜ் செய்துள்ளனர். பின்னர் பிரகாசை அரசு மருத்துவமனையில் சேர்ப்பதற்கான முயற்சிகளில் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.சனி அன்று காலையில் பிரகாசிற்கு மாத்திரைகள் வாங்குவதற்காக அவரது தாய் சாந்தி மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார்.
இந்த நிலையில்தான் தந்தை மற்றும் அக்காவை பிரகாஷ் கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாய் சாந்தி வீட்டில் இல்லாததால் அவர் உயிர் பிழைத்து இருக்கிறார்.கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? சொத்து பிரச்சனை ஏதாவது உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தந்தை மற்றும் அக்காவின் கழுத்தை மகனே அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Kanchipuram