திராவிட நாடு, மாநில சுயாட்சி குறித்து டெல்லியில் கர்ஜித்த தென்னாட்டு சிங்கம், தமிழகத்தில் கோலோச்சும் திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு அடித்தளம் இட்டவர், தமிழ்நாட்டின் வரலாற்றை இவர் இன்றி எழுத முடியாது, அத்தனை சாதனைகளுக்கு சொந்தக்காரர் தான் பேரறிஞர் அண்ணா. திராவிட கட்சி மூலம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியவர் தான் நம்மால் அன்போடு பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை. அவர் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த வீடு மற்றும் அவரது புகைப்படங்களுடன் பேரறிஞர் அண்ணாவின் நினைவுகளை பகிரும் ஒரு செய்தித்தொகுப்பு..
பேரறிஞர் அண்ணா 1909ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி காஞ்சிபுரத்தில் ஓர் எளிய நெசவாளர் குடும்பத்தில் நடராஜன் - பங்காரு அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். மிக எளிய குடும்பத்தில் பிறந்த அண்ணா தனது சித்தி ராசாமணி என்பவராலேயே வளர்க்கப்பட்டார். அண்ணாவின் வீட்டில் இருந்த அவரின் அன்னையார் பங்காரு அம்மாளின் புகைப்படமும் வளர்த்த சிற்றன்னை ராசாமணி அம்மையார் புகைப்படங்களும் நமக்கு அதை நினைவூட்டின.
காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் பள்ளிப் படிப்பை அண்ணா முடித்தார் என்பதை அந்த பள்ளியின் புகைப்படங்கள் நமக்கு கூறியது. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இன்டர்மீடியேட் படிப்பை முடித்தார். அப்போது மிக சாதாரண குடும்பத்தில் பிறந்து சராசரி மாணவரை போலவே பள்ளிப்படிப்பை முடித்த அண்ணாவுக்கு, இந்த பச்சையப்பன் கல்லூரி வாழ்க்கையே திருப்புமுனையை ஏற்படுத்தியது. அங்கே அவர் சந்தித்த ஆங்கிலப் பேராசிரியரும். நீதிக்கட்சியில் செயல்பட்டவருமான, வரதராஜன் தான் அரசியல் பக்கம் அண்ணாவின் கவனத்தைத் திருப்பியவர்.
21 வயதில் அண்ணாவுக்கும் ராணியம்மாளுக்கும் சம்பிரதாய முறைப்படி திருமணம் நடந்தது என்பதை அவரது திருமண பத்திரிக்கை நமக்கு நினைவூட்டியது. பிராமணர் அல்லாதோர் அரசியலுக்கு என்று இருந்த ஒரே கட்சி நீதிக்கட்சி தான் என்பதால் அண்ணாவுக்கு வேறு தேர்வு இருக்கவில்லை. ஆனால், சாமானியர்களை பற்றிய கவலைகளோடு சமூக பாகுபாடுகளை அகற்றப் பாடுபட்டுவந்த, அலங்காரங்கள் இல்லாமல், கடும் மொழியில் பேசிவிடக்கூடிய பெரியார் ஈ.வெ.ராமசாமியைத்தான் அண்ணா தலைவராக தேர்ந்தெடுத்தார்.
பேரறிஞர் அண்ணா தந்தை பெரியார் மீது அளவற்ற அன்பு, மரியாதை கொண்டிருந்தார் என்பதற்கு அங்கிருந்த நிறைய புகைப்படங்கள் சான்றுகளாய் நிற்கின்றன. எதையும் வலுவாக ஆனால், நாசூக்காகப் பேசும் அண்ணாவின் திறமை காரணமாக மாற்றுக் கருத்து உடையவர்களையும் கவரும் ஆற்றல் அவருக்கு இருந்தது. 70 வயதை கடந்த பெரியார் தன்னை விட சுமார் 40 வயது குறைந்தவரான மணியம்மையை திருமணம் செய்ய முடிவெடுத்தது திராவிடர் கழகத்துக்குள் பெரும் புயலைக் கிளப்பியது.
இந்நிலையில், அதிருப்தியாளர்கள் கூடி 1949 செப்டம்பர் 17ம் தேதி திராவிட முன்னேற்ற கழகத்தை ஏற்படுத்தினர். அண்ணா அதன் பொதுச் செயலாளர் ஆனார். இப்படி தான் திராவிட கட்சியின் தோற்றம் அமைந்தது. அதன்பின் முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் மீது அண்ணா கொண்ட அன்பை எடுத்துக்கூறும் புகைப்படங்களும் அங்கு இடம்பெற்றிருந்தன.
தமிழக தேர்தல் களத்தில் திராவிட கட்சியின் சார்பாக நின்று 50 எம்எல்ஏக்களை வெற்றியும் பெற்றனர். சென்னை மாகாணத்தில் அதிக தொகுதிகளில் திமுகவை வெற்றிபெற செய்ததற்காக கருணாநிதிக்கு அண்ணா வழங்கிய நினைவுப்பரிசு புகைப்படும் எங்கே இருப்பதை காண முடிந்தது. ஆனால் அண்ணா தோல்வியடைந்தார். பின்னர் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு கன்னி உரையில் இந்திய நாட்டையே அசரடித்தார். காங்கிரஸ் பெற்ற வெற்றியை கடுமையாக சாடினார். தேர்தலில் சூழ்ச்சி செய்தே காங்கிரஸ் வென்றது என்று அவையை அசரடித்தார்.
மத்திய அரசுக்கு எதிராக செயல்பட்டபோது சில சமயங்களில் கைது செய்யப்பட்டார். 1964ல் சென்னை மத்திய சிறையில் பயன்படுத்திய பாத்திரங்கள் ஆகியவை அங்கு வைக்கப்படுள்ளது. இதை நமக்கு நினைவு கூறுகிறது. ஓய்வு நேரத்தில் அண்ணா வரைந்த ஓவியங்கள், அண்ணா எழுதிய புத்தகங்கள், ஆகியவையும் அண்ணாவிற்கு புத்தகம் வாசித்தலில் இருந்த ஆர்வத்தை நமக்கு எடுத்துக்காட்டியது, திரைத்துறை மற்றும் நாடம் ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டு கதை எழுதி நடித்திருக்கிறார் அண்ணா என்பதை அங்குள்ள புகைப்படங்கள் நமக்கு காட்சிப்படுத்துகின்றன.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
1969 பிப்ரவரி 3ம் தேதி அவர் இறந்தபோது அது பல கோடி மக்களுக்கு பெருந்துயரமாக அமைந்தது என்பதை ”நீடு துயில் நீக்க பாடி வந்த நிலா நீங்காத துயில் கொண்டு விட்ட, நெஞ்சை பிளக்கும் காட்சி என்று குறிப்பிடப்பட்டு இருக்கும் அண்ணா மறைந்த போது இறுதி மரியாதைக்கு வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் பூத உடல் புகைப்படம் அவர் எப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்துள்ளார் என்பதை நமக்கு நினைவூட்டி சென்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News