தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பூல் பாண்டி. 72 வயதான இந்த முதியவரின் மனைவி கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், தன் மகன், மகளுக்கு திருமணம் முடித்து வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.
பின்னர் யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என நினைத்து யாசகம் கேட்டு இவர் ஊர் ஊராக சென்று வருவது வாடிக்கையானது. யாசகம் பெற்ற பணத்தை தன்னுடைய உணவிற்கு போக மீதமுள்ள பணத்தை அவ்வப்போது அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணத்தை வழங்கி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இதன்படி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஆட்சித் தலைவர்களை சந்தித்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய தொகை தற்போது 50 லட்சத்தை தாண்டி இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மதுரையிலிருந்து காஞ்சிபுரம் வருகை தந்த முதியவர் பூல் பாண்டி, காஞ்சிபுரம் பகுதியில் சுற்றி திரிந்து யாசகம் பெற்று 10 ஆயிரம் ரூபாய் சேர்த்துள்ளார். இவ்வாறு யாசகம் பெற்று சேர்த்த பணத்தை உடனடியாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிட வேண்டி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர், அங்கிருந்தவர்கள் வங்கியில் செலுத்தி வரைவு காசோலையாக பெற்று வரக் கூறியுள்ளனர்.
உடனடியாக அருகில் இருந்த வங்கிக்கு சென்று வரைவு காசோலைக்கு மாற்றுவதற்கு பதிலாக நேரடியாகவே முதலமைச்சரின் நிவாரண நிதி வங்கி கணக்கிற்கு பத்தாயிரம் ரூபாய் பணத்தை செலுத்தி விட்டு ரசீதைப் பெற்று வந்தார்.
இதுகுறித்து அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி யாசகம் பெற்று முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பத்தாயிரம் ரூபாய் பணம் செலுத்திய முதியவர் பூல் பாண்டியை நேரில் அழைத்து பட்டு சால்வை அணிவித்து கௌரவித்து பாராட்டினார்.
யாசகம் பெற்று சேர்த்த பணத்தை அவ்வப்போது முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு செலுத்தி வரும் முதியவரின் செயலை கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து பாராட்டி வாழ்த்து தெரிவித்து விட்டு சென்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News