தமிழ்நாடு அரசு மற்றும் சிங்கப்பூர் தொழில் நிறுவனங்கள் இடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் சென்றுள்ளார். சிங்கப்பூரில் அந்நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். டமாசெக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தில்கன் பிள்ளை சந்திரசேகரா-வை சந்தித்து பேசிய முதலமைச்சர், தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள காற்றாலைகள் அளவை அதிகரிக்கவும், புதிய கடல் சார்ந்த காற்றாலைகளை நிறுவவும் முன்வருமாறு கேட்டுக் கொண்டார்.
தமிழ்நாட்டில் மீன்பிடி சார்ந்த தொழில் துறைகளிலும், உணவுப் பதப்படுத்தும் துறைகளிலும் தங்கள் நிறுவனம் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ளதாக முதலமைச்சரிடம் டமாசெக் நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார்.
அதன்பின் செம்ப்கார்ப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிம்யன் வாங்க் உடன் பேச்சுவார்த்தை நடத்திய முதலமைச்சர் , எரிசக்தி தொடர்பான பல்வேறு பிரிவுகளில் தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இறுதியாக கேப்பிட்டா லேண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ் தாஸ் குப்தாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது செம்ப்கார்ப் மற்றும் கேப்பிட்டா லேண்ட் நிறுவன அதிகாரிகள், தமிழ்நாட்டில் தொழில் செய்வதற்கு தங்களது நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளதாகவும், விரைவில் அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வதாகவும் முதலமைச்சரிடம் உறுதியளித்ததாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் அமைச்சருக்கு அழைப்பு
அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஈஸ்வரனை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். புதிய தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்வது குறித்து உரையாடியதோடு, சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார். அப்போது, பசுமைப் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற துறைகளில் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளது குறித்து ஈஸ்வரன் விவாதித்தார்.
அதன்படி, சிங்கப்பூரில் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள FINTECH மாநாட்டிற்கு தமிழ்நாட்டின் குழுவை அனுப்பவும் கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருவதாக, சிங்கப்பூர் வர்த்தகத்துறை அமைச்சர் ஈஸ்வரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
312 கோடியில் முதலீடு
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூரைச் சேர்ந்த Hi-P நிறுவனத்திற்கும் இடையேயும் ஒப்பந்தம் கையெழுத்தானது. 312 கோடியில் முதலீடு மற்றும் 700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
முன்னதாக சிங்கப்பூர் சென்ற முதலமைச்சருக்கு, சிங்கப்பூர் தமிழ் அமைப்புகளின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, Singapore