ரஷ்யா மிக ஆழமான ஆழ்துளை கிணற்றை 1970களில் 20 ஆண்டுகளாக தோண்டியது. 12,261 மீட்டர் ஆழம் தோண்டபட்ட இந்த கிணறு பூமிக்கடியில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக 2005 வரை இருந்தது. பின்னர் 2008ல் மூடப்பட்டது.
ரஷ்யாவை போன்றே அமெரிக்கா நிலபரப்பிலும், ஜப்பான் கடலிலும் ஆழ்துளை கிணறு தோண்டும் பணியில் இறங்கின. தற்போது சீனாவும் 10,000 மீட்டர் ஆழமான ஆழ்துளை கிணறை தோண்டும் பணியில் இறங்கியுள்ளது. கிட்டத்தட்ட 32,808 அடி ஆழம். அதாவது துபாயில் உள்ள மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவை விட 10 மடங்கு ஆழமாக பூமிக்கடியில் தோண்டப்பட உள்ளது.
எதற்காக சீனா இந்த ஆழ்துளை கிணற்றை தோண்ட உள்ளது. எவ்வாறு இப்பணியை மேற்கொள்ளப் போகிறது. இதனால் உலக நாடுகளுக்கு ஏதேனும் அச்சுறுத்தல்கள் உள்ளனவா போன்ற பல்வேறு கேள்விகள் நமக்கு எழுகின்றன.
சீனாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிடப்பட்டுள்ளது. சீனாவின் தென்மேற்கு ஷின் - ஜியாங் பகுதியில் இப்பணிகள் தொடங்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஷின் - ஜியாங் சீனாவின் மிகப்பெரிய மாகாணம் ஆகும். சீனாவின் மூன்றில் ஒரு பங்கு இயற்கை எரிவாயு, எண்ணெய் வளங்கள் இங்கிருந்துதான் கிடைக்கப்பெறுகின்றன. அதுமட்டுமன்றி 38% நிலக்கரி வளம், 25 பில்லியன் கியூபிக் மீட்டர் நிலத்தடி நீர்வளம், 730 மில்லியன் டன் அளவிலான இரும்பு தாதுக்கள் உள்ள பகுதியாகவும் இருக்கிறது.
இப்படிப்பட்ட இயற்கை வளங்களின் இருப்பை கண்டறியவே அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகள் ஆழ்துளை கிணறு தோண்டும் பணியில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்தன. ஆனால் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை பேரழிவுகளை முன்கூட்டியே கண்டறிவதற்கான ஆராய்ச்சிக்காகவே இந்த 10 கிலோமீட்டர் தூர ஆழ்துளையை தோண்டவிருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
உலக புவியியல் உட்கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு சீன தேசிய பெட்ரோலிய கார்பரேஷன் இப்பணிகளை 457 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளது. 11,000 மீட்டர் ஆழத்தை இலக்காக கொண்டு 2,000 டன் எடை கொண்ட இயந்திரங்களின் மூலம் கிணறு தோண்டப்படவிருக்கிறது. இதன்மூலம் 145 மில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைகளை கண்டறிய முடியும் என கணிக்கப்படுகிறது.
ஆனால் இந்த பணிகளில் உள்ள சிக்கல்கள் குறித்தும் சீனப் பொறியாளர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக பாலைவன பகுதிகளை ஒட்டியுள்ள ஷின் - ஜியாங் -ன் கடினமான நிலப்பரப்பை உடைத்து துளையிடுவதே கடினம் எனவும் இரண்டு பெரிய ட்ரக்குகளை மெல்லிய ஸ்டீல் கம்பி மீது ஓட்டிச்செல்வதற்கு சமம் எனவும் குறிப்பிடுகின்றனர்.
மேலும் படிக்க... H1b விசாக்களை அதிகம் பெற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியர்களுக்கு முதலிடம்!
இந்த சிக்கல் ஒருபுறம் இருக்க நிலத்தடியில் உள்ள பாக்டீரியா வைரஸ் உயிரினங்களை வெளிவரச்செய்து மனித வாழ்வுக்கு சவால்களை உண்டாக்கும் கோவிட் போன்ற நோய்கள் பரவ வழிவகுக்கும் என எச்சரிக்கின்றனர் சர்வதேச அறிவியலாளர்கள். இதற்கு உதாரணமாக ஆர்க்டிக் பகுதியில் இருந்து ஆய்வுகுட்படுத்தப்பட்ட பல்லாயிரம் ஆண்டு பழமையான பனிப்பாறைகளில் வைரஸ்கள் உறைந்து இருந்து கண்டறியப்பட்டதை குறிப்பிடுகின்றனர்.
இந்த அச்சுறுத்தல்களை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் சீனா எவ்வாறு ஆழ்துளை கிணறு தோண்டும் பணியையும் அதனால் ஏற்படப்போகும் விளைவுகளையும் சந்திக்கப் போகிறது என்பதே உலக நாடுகள் எழுப்பியுள்ள கேள்விகள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: China